

‘வானமெங்கும் என் சிறகு’ கவிஞர் கலைபாரதியின் அபுனைவு. சின்னச் சின்னக் கட்டுரைகள். மன்னார்குடியிலிருந்து வெளிவரும் ‘கண்ணாமூச்சி’ இதழில் வெளிவந்தாவை. கல்வி, ஆசிரியர் – மாணவர் உறவு, அன்பு, நட்பு, ஊர்ப்புற வாழ்வு, காதல், இலக்கியம், மனித உறவுகள்... பற்றிய முப்பத்தியாறு குறுங்கட்டுரைகள். வாய்மொழி நடையும், கவித்துவ மொழியும் வாசகரை ஈர்க்கின்றன.
எளிய நேர்ப்பேச்சு போல அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் தருணங்களை, அனுபவங்களை எழுத்தாக்கித் தருகிறார். தன் மாணவப் பருவத்தில் தன்னைக் கவர்ந்த ஆசிரியர்களை அழகாகக் காட்சிப்படுத்துகிறார்.
அதேபோல் தான் ஆசிரியராக இருக்கும் போது தன்னில் கரைந்த மாணவர்களையும் பதிவு செய்கிறார். திருமணத்துக்கு ஆசிரியரை அழைத்து தலைமை தாங்கச்சொன்ன, ஆசிரியர் பெயரை தம் குழந்தைக்குச் சூட்டிய மாணவர்களை நெகிழ்வுடன் சுட்டுகிறார். அருகி வரும் ஆசிரியர் – மாணவர் நல்லுறவின் சான்றுகள் இவை.