

தமிழ் இலக்கியத்தில் பல்வேறு மாற்று முன்னெடுப்புகளை நிகழ்த்திய தமிழவன், ‘உலகச் சிந்தனையில் கிளைப் பரப்பிய ஒரு மரம்’ என்ற பெயரில் தன்வரலாற்று நூலொன்றை எழுதியுள்ளார். உலக அளவில் தன்வரலாற்று நூல்களுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கிறது.
உலகத் தலைவர்கள், இலக்கிய ஆளுமைகள், அறிவியல் அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள், தத்துவ ஆசிரியர்கள், வணிக வெற்றியாளர்கள் எனப் பலர் தங்களது வாழ்க்கையை நூல்களாக எழுதி, பெருந்திரளான வாசகர்களால் வாசிக்கப்பட்டும் வருகின்றன.
ஒரு தன்வரலாற்று நூல் இப்படித்தான் எழுதப்பட வேண்டும் என்பதற்கு எந்தவொரு வரையறையையும் உருவாக்க முடியாது. ஏனெனில், தன்வரலாறும் புனைவெழுத்து போன்று கட்டற்ற ஓர் எழுத்து வடிவம்தான்.
தன்னை எழுதுதல் தன்வரலாறாக இருக்க முடியாது என்று கூறும் தமிழவனின் இந்த நூலைக்கொண்டு அவரது பிறந்த தேதியைக்கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. சமூகம், அரசியல், கலை, பண்பாடு, விழுமியங்கள் என அனைத்தும் தன்வரலாற்று நூலுக்குள் இடம்பெற வேண்டும். ‘நான்’ என்கிற தன்னிலையை வெளியே நிறுத்திவிட்டு எழுதும்போதுதான், அது சமூகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய வரலாறாக இருக்கும்.