

போருக்கு பின்னான ஈழ படைப்புகளில், யுத்தத்தின் தாக்கத்தையும் அது கொடுத்த வலிகளையும் பார்த்திருக்கிறோம். அ.முத்துலிங்கத்தின் ‘கடவுள் தொடங்கிய இடம்’ நாவலைப் போல இன்னும் சில, போலி கடவு சீட்டு மூலம் புலம்பெயர் தமிழர்கள், நாடுகளின் எல்லைகளில் எதிர்கொள்ளும் நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளையும் அலைகழிப்புகளையும் சிக்கல்களையும் பேசியிருக்கின்றன. அந்த வகையில் சயந்தனின் ‘திசை ஒன்பது’ நாவலும் அது போன்றதொரு பிரச்சினையைப் பேசுகிறது.
'ஐரோப்பிய எல்லையில் எட்டுத் திசைகளும் அடைக்கப்பட்ட பிறகு ஒன்பதாவது திசைக்காகக் காத்திருக்கும் ஓர் அகதியின் கதை இது' என்று சயந்தன் இந்நாவலை வரையறுத்தாலும் அது பல்வேறு நாட்டு எல்லைகளில், வேலி தாண்ட துடிக்கிற, அம்முயற்சியில் தோல்வியுற்று மனதுக்குள் தவிக்கிற, வேறொரு நாட்டில் அமைதியான வாழ்க்கைக்காக ஏங்கி புழுங்குகிற ஏராளமானோரின் கதை.
சுவிஸ் நாட்டுக்குத் தஞ்சம் தேடிச் செல்கிற இளங்கோவை மையமாகக் கொண்டு, தன் வரலாற்று பாணியில் செல்கிறது இந்நாவல். நான் லீனியர் முறையில் சொல்லப் பட்டிருக்கும் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிற இக்கற்பனைக் கதை, முதல் பக்கத்தில் இருந்தே எளிதாக உள்ளிழுத்துக் கொள்வதற்கு சயந்தனின் எள்ளலுடன் கூடிய அழகான மொழிநடையும் காரணம்.