

தமிழின் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திருக்குறள், இரண்டடிகளையும், ஏழு சீர்களையும் உடைய வெண்பாக்களால் எழுதப்பட்ட சிறப்புக்குரியது. ஒரு மனிதனின் வாழ்வியலுக்கு அடிப்படையாக விளங்குகிற அறச் சிந்தனைகளையும், பொருளீட்டும் வழிமுறைகளையும், உடலின்பத்திற்கான ஒழுக்க நெறிகளையும் அறம், பொருள், இன்பம் எனும் முப்பிரிவுகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ள நூலாகும்.
‘உலக மனிதகுல மேன்மைக்கான அரிய நல்ல பல சிந்தனைகளைக் கொண்ட நூல்’ என்று உலக மொழியியல் அறிஞர்களாலும் சமூகச் சிந்தனாவாதிகளாலும் பாராட்டப்பெறும் திருக்குறள், எந்தக் காலத்தில் எழுதப்பட்டது என்பதை இன்னமும் அறுதியிட்டுக்கூற இயலவில்லை.
கி.பி. 10ஆம் நூற்றாண்டில் மணக்குடவர் தொடங்கி, பரிமேலழகர், வ.உ.சிதம்பரனார் என எண்ணற்ற தமிழறிஞர்கள் திருக்குறளுக்கு உரையெழுதியுள்ளனர். இன்னமும் எழுதி வருகின்றனர்.
இப்படியான சூழலில் எதையும் புதுமையாகவும் புதிய கோணத்திலும் சிந்தித்து எழுதும் எழுத்தாளர் இறையன்பு, ‘திருக்குறள் 100’ எனும் நூலைப் படைத்துள்ளார். முன்பே திருக்குறளில் இருமுறை ஆய்வுகளை மேற்கொண்டுள்ள நூலாசிரியர், இந்த நூலில் தன் சிந்தனையோட்டத்தில் 100 வினாக்களை எழுப்பி, அதற்கான விடைகளையும் திருக்குறள் வழிநின்று தேடிக் கண்டடைந்துள்ளார்.