

தன்வரலாறு எழுதிய தமிழ் அறிஞர்கள் மிகக் குறைவான பேர்தான். தங்களது விரிவான பணிகள் குறித்து இதழ்களில் சுருக்கமான நேர்காணல் வெளியிடப்படுகிற வாய்ப்புகூடக் கிடைக்கப்பெறாமலே வாழ்ந்து மறைந்துவிட்ட அறிஞர்கள் பலர். மிகச் சிலருக்கு அவர்களது குடும்பத்தினரோ, நண்பர்களோ வாழ்க்கை வரலாறு எழுதியிருக்கின்றனர்.
பொதுவாக, தமிழறிஞர்களின் பங்களிப்பு குறித்து ஆவணப்படுத்துவதில் தமிழ்ச் சமூகம் பின்தங்கியுள்ளதை மறுக்க முடியாது. 1950களுக்குப் பிறகு செயல்பட்ட பல அறிஞர்கள் குறித்த முறையான பதிவுகள் இல்லை என்பது வேதனைக்குரியது. ‘தகைசால் தமிழ்த் தொண்டர்கள் - தொகுதி 1’, அந்தக் குறையைப் போக்கும் வகையில் வெளிவந்துள்ள ஒரு நூல். இது 42 அறிஞர்களது பங்களிப்பைச் சுருக்கமாகவும் சுவாரசியமாகவும் முன்வைக்கிறது.
முனைவர் மு. இளங்கோவன் இந்நூலை எழுதியுள்ளார். இவர் இந்திய அரசின் ‘செம்மொழி இளம் அறிஞர் விருது’, தமிழக அரசின் ‘தூய தமிழ் ஊடக விருது’ உள்படப் பல விருதுகளைப் பெற்றவர்; தற்போது புதுச்சேரி அரசு காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிகிறார்.