

வாழ்வியற் களஞ்சியம், அறிவியல் களஞ்சியம், நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம், பாலியல் கலைக்களஞ்சியம், மூலிகைக் கலைக்களஞ்சியம், தமிழிசைக் கலைக்களஞ்சியம், மருத்துவக் களஞ்சியம் என்று ஏராளமான களஞ்சிய நூல்கள் தமிழில் உள்ளன.
இதற்கெல்லாம் முன்னோடியாக விளங்குவது, ம.ப. பெரியசாமித்தூரனை முதன்மை ஆசிரியராகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘கலைக்களஞ்சியம்’தான். Encyclopaedia என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகராகக் ‘கலைக்களஞ்சியம்’ என்ற சொல்லை உருவாக்கியவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்.
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தோற்றம்
சென்னை மாநிலக் கல்வி அமைச்சராக இருந்த தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார், 1946ஆம் ஆண்டில் ‘தமிழ் வளர்ச்சிக் கழகம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். ஆங்கிலத்திலுள்ள Encyclopaedia போன்று தமிழிலும் கலைக்களஞ்சியங்களை உருவாக்குவதையே இக்கழகம் முதன்மைப் பணியாக மேற்கொண்டது.
கலைக்களஞ்சியத்தின் முதல் தொகுதி 1954ஆம் ஆண்டு 742 பக்கங்களுடன் வெளிவந்தது. கலைக்களஞ்சியத்தின் பத்தாவது தொகுதி இணைப்புத் தொகுதியாக 1968இல் வெளிவந்துள்ளது.
களஞ்சியத்தின் உள்ளடக்கம்
கலைக்களஞ்சியத்தில் தமிழ், தாவரவியல், விலங்கியல், தத்துவம், சமயம், உளவியல், அளவையியல், ஆங்கிலம், நாடகம், இசை, புள்ளியியல், விவசாயம் போன்ற நாற்பத்தேழு துறைகள் சார்ந்த சொற்கள் இடம்பெற்றுள்ளன.
2240 அறிஞர்கள் இச்சொற்கள் குறித்து எழுதியுள்ளனர். இந்தப் 10 தொகுதிகளையும் வெளியிட 21 ஆண்டுகள் (1947-1968) ஆகியுள்ளன.