

சங்கப் பாடல்கள் குறித்து முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனின் சொற்பொழிவுத் தொகுப்புகள் இவை. மொத்தம் 415 பாடல்கள், ஐந்து தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பாடலின் நூற்பெயர், அகப்பாடலா புறப்பாடலா, திணை, துறை என்னவென்பதையும் தெரிவிக்கிறார். சங்க இலக்கிய சிறப்புகள், தமிழர் வாழ்வியலின் முறைமைகளை எளிய கோணங்களில் அகழ்ந்தெடுத்துத் தருகிறார்.
இந்நூலில், ‘தமர்தன் தப்பின்...’ எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல் ஒன்று, இளவெயினி என்ற பெண்பாற்புலவர் இயற்றியது. இது மன்னன் ஏறைக்கோனைப் பற்றியது. தலைவனின் பண்புகள் குறித்தும் இப்பாடலில் வருகிறது.
‘தமக்கு வேண்டியவர் தவறு செய்தால் பொறுத்துக்கொள்ளுதல், பிறர் தவறு செய்தால் அதற்காக தான் நாணுதல், போரில் திறமையைக் காட்டுதல், வேந்தர் அவையில் பெருமிதத்துடன் நடத்தல்’ எனக் கூறும் நூலாசிரியர், நகர்ந்துசெல்லும் மேகங்களைத் தடுத்து மழையைப் பொழிவிக்கும் மலைச்சிகரத்திற்கு இணையாக அரசனை ஒப்பிடும் இளவெயினியின் புலமையையும் வியக்கிறார்.