

இதிகாசங்களை மீட்டுருவாக்கம் செய்வது இருபதாம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. நவீன இலக்கியவாதிகள், தங்கள் படைப்புகளில் தற்கால வாழ்க்கையின் பல்வேறு அனுபவங்களையும் உணர்வுகளையும் சித்தரிப்பதற்காக தொன்மங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
அவ்வகையில், இராமாயணத் தொன்மங்களைப் பயன்படுத்தித் தமிழில் எழுதப்பட்ட சிறுகதைகளைத் தொகுத்து, ‘ராவணன் காதல்’ என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார், சுப்பிரமணி இரமேஷ்.
இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களும், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களும் மக்களின் மனதில் இன்றைக்கும் செல்வாக்கைச் செலுத்துகின்றன. இன்றைய பண்பாட்டைக் கட்டமைக்கும் வலிமைமிக்கவையாகவும் உள்ளன.
இராமாயணத்தில் இடம்பெற்ற அகலிகை, சீதை, ஊர்மிளை, இராமன், இராவணன், இலக்குமணன் முதலிய கதைமாந்தர்களை நவீன இலக்கியவாதிகள் சிறுகதைகளில் எவ்வாறு மீள்வாசிப்புச் செய்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ளும் வண்ணம் சுப்பிரமணி இரமேஷ் பதினேழு சிறுகதைகளைத் தொகுத்துள்ளார்.