

| படம்:எஸ். சத்தியசீலன் |
சென்னை: திருமண வாழ்க்கையில் நிகழக்கூடிய சிறு சிறு நெருடல்களுக்கு கூட எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் கதைகளில் பதில் இருக்கும் என சென்னையில் நடந்த ‘செந்தமிழ் சிற்பிகள்’ நிகழ்ச்சியில் பேராசிரியர் கே.பாரதி தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித் துறையின் பொது நூலக இயக்ககம் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகம் சார்பில் ‘செந்தமிழ் சிற்பிகள்’ உரையரங்கம் தொடரின் 21-வது நிகழ்வு, கோட்டூர்புரத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பெண் விடுதலை, சமூகம் மற்றும் குடும்ப உறவுகளை தனது தனித்துவமான படைப்புகள் வழியே முன்னிறுத்திய ‘எழுத்தாளர் ஆர். சூடாமணியின் சிறுகதைகளில் குடும்ப உறவுகள்’ என்ற தலைப்பில், பிரபல பேராசிரியர் கே.பாரதி சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசியதாவது: சென்னையை சேர்ந்த எழுத்தாளரான சூடாமணி, 1950-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு இலக்கியப் பத்திரிகைகளில் கதைகளை எழுதி தடம் பதித்தவர்.
குறிப்பாக, சிறுகதைகளில் வல்லமை மிக்கவரான அவர், தமிழில் 500-க்கும், ஆங்கிலத்தில் 300-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் படைத்துள்ளார். ஜெயகாந்தன், ஜானகிராமன், அசோகமித்ரன், சுந்தர ராமசாமி, சிவசங்கரி, வசந்தி போன்ற பெரும் ஆளுமைகள் எழுதித் தள்ளிய சமகாலத்தில், இவரும் தன் எழுத்துகளை பதிவு செய்துள்ளார். எனினும், இலக்கிய உலகில் சூடாமணிக்கு உரிய அங்கீகாரம் முழுமையாக கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது.
வாழ்க்கையைப் பற்றிய மிக ஆழமான புரிதலை கொண்டிருந்த சூடாமணி, தன் கதைகளில் திருமண உறவுகள் பற்றி பேசும்போது, சிறுவர்கள் பொம்மைகளுக்கு திருமணம் செய்து வைப்பதைபோல, மணமக்களின் உணர்வுகளையும், விருப்பங்களையும் அறியாமல் பெரியவர்கள் நடத்தும் திருமணங்கள், அத்தகைய ஏற்பாடுகளால் அமையும் குடும்பங்களில் தோன்றும் குழப்பங்கள், உணர்வுப் போராட்டங்கள் பற்றியும் விரிவாக விவரித்திருக்கிறார்.
அதேநேரம், காதல் திருமணங்களில் கூடுதல் புரிதல் இருக்குமே தவிர, அங்கும் சிக்கல்கள் எழாமல் இருக்காது என்றும், உண்மையான மற்றும் வலிமையான அன்பு இருந்தால் எத்தகைய பிரச்சினைகளையும் கடந்து வாழலாம் என்றும் கூறுகிறார்.
வாழ்க்கையில் நிகழக்கூடிய சிறு, சிறு நெருடல்களுக்கு எல்லாம்கூட சூடாமணி பதில் வைத்திருப்பார். ‘வணக்கம் நான் சாந்தா’, ‘நான் தானே உன் மகள்’, ‘விருந்தினர்களில் ஒருவன்’, ‘கடிதம் வந்தது’ போன்ற கதைகள் இதற்கு சான்றுகளாக திகழ்கின்றன.
வளரிளம் பருவ குழந்தைகளை பெற்றோர் எப்படி அணுக வேண்டும் என்பதையும் அவர் அழகாக விளக்கியுள்ளார். அவரது கதைகளில் வரும் மனிதர்கள் எளிதில் பிரிவதில்லை. அவ்வாறு பிரிந்தாலும் ஏதோ ஒரு புள்ளியில் மீண்டும் இணைந்து விடுகிறார்கள்.
உறவுகளில் எல்லாரிடத்திலும் நம்மால் அன்பு காட்டிவிட முடியாது. ஆனால், குறைந்தபட்சம் நியாய உணர்ச்சியோடு இருங்கள் என்கிறார் சூடாமணி. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில், முன்னாள் நீதிபதி சந்துரு, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ், அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதன்மை நூலகர், தகவல் அலுவலர் காமாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.