

இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில், குறிப்பாக அறுபதுகளில் தமிழ்க் கல்விச் சூழல் எப்படி இருந்தது என்பதை விவரிக்கும் முக்கியமான நாவல் க.பஞ்சாங்கம் எழுதியுள்ள 'ஒரு பேராசிரியரின் கதை’. தலைப்பு பேராசிரியரின் கதையாக இருந்தாலும், ஆறுமுகம் என்கிற முதல் தலைமுறை மாணவன், எவ்வாறு பேராசிரியராகிறான் என்பதைப் பதிவு செய்யும் தன்மையிலேயே இந்த நாவல் அமைந்துள்ளது.
சுயசரிதைத் தன்மையுடன் எழுதப்பட்டாலும், அறுபதுகளில் நிலவிய சமூகச் சூழலைக் கண்முன் நிறுத்தியுள்ளது இந்த நாவல். நகரமயமாதலின்போது, கிராமத்திலிருந்து நகரத்திற்குப் படிக்க வரும் மாணவன் எதிர்கொள்ளும் சிக்கல்கள், ஆங்கிலம் தெரியாததால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை, கல்லூரி விடுதிகளில் கழிப்பறையைப் பயன்படுத்தத் தெரியாமல் தவிக்கும் அவலம், கால் செருப்பு அணியாமலேயே பதின்பருவத்தைக் கடக்கும் துயரம் யாவற்றையும் பஞ்சாங்கம் இந்த நாவலில் அற்புதமாகப் பதிவு செய்துள்ளார்.
மதுரையில் தியாகராயர் கல்லூரியில் தமிழ் பயின்றபோது, அறுபத்தைந்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழகத்தில் நிலவிய கொந்தளிப்பு நிலை, தமிழகப் பேரறிஞர் அண்ணாவின் மறைவு, முதலிய அரசியல் சூழலை விவரிப்பதாகவும் இந்த நாவல் அமைந்துள்ளது.