

மேனாள் கல்வி அமைச்சர், வைகைச்செல்வன் ஓர் அரசியல்வாதி மட்டுமல்ல, சொற்பொழிவாளர், கவிஞர் எனவும் அறியப்படுபவர். தமிழ் இதழ்களில் அவர் எழுதிவரும் கட்டுரைகளில் பரந்த வாசிப்பனுபவத்தை அறியலாம். ‘ஒரு நூற்றாண்டின் தவம்’ என்ற இந்நூலில், 2019லிருந்து 2024 முடிய ஐந்தாண்டுகளில் அவர் எழுதிய கட்டுரைகளில் அனுபவங்களின் சாரமும், வருங்காலத்திற்கான சிந்தனைகளும் வெளிப்பட்டுள்ளதே அதற்கு சான்று.
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டிலிருந்து இந்நூல் தொடங்குகிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைப் பற்றி ‘இந்தியத் தேர்தல் கடந்து வந்த பாதை’, சூழலியல் குறித்து ‘பூமியில் எரியும் ஆபத்து’, பொருளாதாரத்தைப்பற்றிய ‘திட்டமிட்டால் பொருளாதாரம் மேம்படும்’, மருத்துவக் கல்வியில் உள்ஒதுக்கீட்டின் அவசியத்தைச் சொல்லும் ‘மருத்துவப் படிப்பு: உள்ஒதுக்கீடுதான் தீர்வு’, நவீன அறிவியல் தொழில்நுட்பத்தைப் பற்றிய ‘இணையவழிதான் இனிமேல் வழி’, தமிழர்களின் தொன்மை வரலாற்றைப் பேசும் ‘நமது தாய்மடி கீழடி: வைகை நதிக்கரை நாகரிகம்’, மக்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் ‘கழிவுநீரால் மாசடையும் ஆறுகள்’, ‘உக்ரைன் - ரஷ்யா போரும் பின்னணியும்’ என சர்வதேச பார்வையில் அமைந்த பல கட்டுரைகளோடு, மத்திய – மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளைப் பற்றிய விமர்சனப்பூர்வமான கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.