

“எழுத்து என்பது வார்த்தைகளுக்கு இறக்கை கட்டுகிற அனுபவம். எழுத்தாளனுடன் அமர்ந்து வாசகனும் கதைக்குள் சேர்ந்தே பயணிக்க வேண்டும். எழுத்தில் நேரடியாகப் பகிர்ந்துகொள்ளப்படாத விசயங்களையும், வாசிப்பவர் குறிப்பால் உணர்ந்துகொள்ள முடியுமானால், அதுதான் இருவருக்கும் பொதுவான சிறந்த தொடர்பாக மாறுகிறது.
அப்படி ஓர் அனுபவத்தை நிகழ்த்தவே இயன்றவரை முயன்றிருக்கிறேன்” என்கிறார் ச.ஆனந்தகுமார். தன்னுடைய இந்தக் கூற்றுக்கு நியாயம் செய்யும் விதத்தில், ‘நினைவு யாழ்’ தொகுப்பில் உள்ள 17 சிறுகதைகளையும் அவர் படைத்திருக்கிறார்.
வறுமையின் மகிழ்ச்சிக்கும், முதுமையின் தனிமைக்கும் இடையிலான இடைவெளியை ஒரு முதியவரின் ஏக்கத்தின் வழியே ‘காத்திருப்பு’ கதையில் வாசகர்களிடத்தில் கடத்துகிறார் ஆனந்தகுமார்.