

சமூகப் பணியாளரும் எழுத்தாளருமான அமுதா செல்வி எழுதியுள்ள ‘மையிருளி’ நாவல், இதுவரை பேசாப்பொருளாகக் கற்பிதம் செய்யப்பட்டுள்ள பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்ணுடல்களின் துயரக் கதைகளைப் பேசுகிறது.
குடும்ப உறவில் காலங்காலமாக நிலவுகிற பெண் பற்றிய விழுமியங்களைப் புறக்கணித்துப் பெண்களை வெற்றுடல்களாக அணுகி வதைக்குள்ளாக்குகிற ஆண்களின் மறுபக்கம் பற்றியகதையாடல், நாவலின் மையமாகும்.
விலைமகளிரான பெண்களை முன்வைத்துத் தமிழில் இதுவரை எழுதப்பட்ட புனைவுகளில் இருந்து மாறுபட்டு நாவலாசிரியர் அமுதா விவரித்துள்ள கதைகள், பெண்கள் காலந்தோறும் எதிர்கொள்கின்ற வலிகளை அழுத்தமாக விவரிக்கின்றன.
சமூகப் பணிக் கல்லூரி மாணவியான செம்மலர், கள ஆய்வுக்காகத் தருமபுரியிலுள்ள பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் மறுவாழ்வு மையத்துக்குச் செல்கின்றார். அப்பொழுது அவர் சந்திக்கின்ற பதினெட்டு வயதான சைலஜா என்ற பாலியல் தொழிலாளி சொல்கின்ற நான்காண்டு கசப்பான அனுபவங்கள், முடிவற்ற கதைகளாக விரிகின்றன.
நாவலின் மையமாக சைலஜா இருந்தாலும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பல்வேறு பெண்களின் அவலமான கதைகள் முதன்மையாக உள்ளன. கர்நாடகாவிலுள்ள கிராமத்தில் பிறந்த கெங்கம்மா சிறுமியாக இருக்கும்போது கோவிலுக்கு நேர்ந்து விடப்படுகிறாள்.