

வான்கா வாழ்ந்தும், வரைந்தும், உண்டும், அருந்தியும், வாழ்ந்த ஒவ்வொரு நகரமும், கிராமமும், சிற்றுண்டிச் சாலைகளும், அவன் நடந்த வயல்வெளிகளும், வானங்களும் இப்படைப்புக்குள் நகர்ந்து செல்கின்றன. இப்படைப்பின் ஒவ்வொரு வரிக்கு இடையிலும், ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும், ஒரு நிறம் அல்லது ஓர் ஒளி ஊடாடிச் சலனிப்பதை நுட்பமான வாசகனால் உணர்ந்துகொள்ள இயலும்.
நிலக்கரிச் சுரங்கங்களின் காரிருள், காதலின் இளஞ்சிவப்பு, குறுங்காடுகளில் முகிழ்த்திருக்கும் செம்பூக்கள், மழைக்குப் பிறகு கவியும் சோகச் சாம்பல் நிறம் எனக் காட்சி தோறும் இறைந்து கிடக்கும் இன்னும் ஏராளமான நிறங்கள், கதை நகர்வின் உணர்வுகளோடு இயைந்து இயங்குகின்றன.