

சமீப காலங்களில் தெலுங்கு இலக்கியங்கள் தமிழுக்கு உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், திராவிடப் பல்கலைக்கழகப் பேராசிரியர் த.விஷ்ணுகுமாரன், தெலுங்கு இலக்கியத்தின் சமகால எழுத்தாளர் குப்பிலி பத்மாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
குப்பிலி பத்மாவின் கதைகள் நவீன யுகத்தின் பெண்ணியத்தைப் பேசுபவை. பாலினச் சமமின்மையிலிருந்து தன் எழுத்தை அவர் கட்டமைத்திருக்கிறார். ஆண்களின் தடித்தனம்தான் அவர் கதைகளின் மையமாகச் செயல்படுகிறது.
அழுது வடியும் பெண்களை இவர் தம் கதைகளுக்குப் பயன்படுத்தவில்லை. தன்னை மிதித்தவர்களின் மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நம்பிக்கையான பெண்களைக் குப்பிலி பத்மா திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறார் என்று தோன்றுகிறது.
குடும்பம் என்ற அமைப்பிற்குள் பெண்கள் வெவ்வேறு வடிவங்களில் சுரண்டப்படுவதை இவர் பல கதைகளின் வழியாக உரையாடலை முன்னெடுத்திருக்கிறார். இத்தொகுப்பின் முதல் கதையான ‘முக்தா’ கதையில், முக்தாவிற்குத் திருமணம் நடைபெறவில்லை.