

பிறக்கும்போது தன் தாயைப் பறிகொடுத்தவன் மரியா. அவனை மருத்துவர் ஆக்க வேண்டும் என்பது இறந்துபோன தாய் சாராளின் கனவு. மரியாவுக்குச் சேவகனாகவே தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறான் அவனது தந்தை பெரியநாயகம். தந்தையும் மகனும் பெங்களூருவில் உள்ள ஃபிரெஞ்சுப் பாதிரியார் ஆந்த்ரேவிடம் அடைக்கலம் புகுகின்றனர்.
மூன்று பேரின் கதையாகவோ, எண்ணற்ற வெற்றிக்கதைகளில் ஒன்றாகவோ இந்தப் புதினம் முடிந்திருக்கும் சாத்தியம் உண்டு. ஆனால் ஊகிக்கப்படும் வரம்புகளுக்குள் அடங்கி விடாமல், கலைடாஸ்கோப்பில் நிகழும் பல வண்ணங்களின் சங்கமம்போலப் பல மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரங்களை ‘கறுப்பு ரட்சகன்’ உள்ளடக்கியிருக்கிறது.
பெரும்பான்மையான பேரின் எதிர்ப்பையும் மீறிப் பாலியல் தொழிலாளியின் சடலத்தை நல்லடக்கம் செய்யப் போராடும் பாதிரியாராக இருக்கிறார் ஆந்த்ரே. சமையலுக்காக மட்டும் கத்தி பிடிப்பவனாக அல்லாமல், தேவைப்பட்டால் நீதிக்காகவும் ஆயுதம் ஏந்துபவனாக இருக்கிறான் பெரியநாயகம்.