

நாவலாசிரியர் கரன் கார்க்கி, இந்நாவலில் வரலாற்று வலிகளை, வாழ்வின் கடந்துபோன துயரங்களை உணர்ச்சி கொந்தளிப்பாக வைக்கிறார். வெண்மணி படுகொலை, ஹிட்லர் யூதர்களைக் கொன்று குவித்தது உள்ளிட்ட தகவல்களை மனசாட்சி உள்ளவர்கள் எளிதாகக் கடந்து போய்விட முடியாது என்பதை நிறுவுவதற்காக தனியாக ஒரு கதாபாத்திரத்தைப் படைத்துள்ளார்.
கல்லூரியின் முதுகலை மாணவனான நாயகன் சமரன், வாசிப்புகளின்வழியே மனிதர்களையும் உலகையும் புரிந்துகொண்டவன். அவனுடைய பேராசிரியர் முரளி உலகின் தத்துவங்களை எளிதாக, அழகாக எடுத்துச் சொல்கிறவர்.
அரசியல், சமூக அறிவுமிக்க ஆசிரியரின் உரைகளை ரசிக்கும் சமரனே இந்நாவலின் மையம். இந்நாவலில் அவனது வாசிப்புகளின் விவரங்கள், அறிஞர்களின் மேற்கோள்கள், விவாதங்கள், கானா பாடல்கள், திரைப்பாடல் வரிகள் குறித்த விவரங்கள் அளவுக்கு அதிகமாகவே கதைசொல்லலை விஞ்சி நிற்கின்றன.