

இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் சிறை வாழ்க்கை உணர்வுபூர்வமாகப் பதிவாகியுள்ள நூல் இது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மாநில துணைச் செயலாளராகப் பணியாற்றிய சி.மகேந்திரன், அய்யா நல்லகண்ணுவுடன் சேர்ந்து பயணித்த அனுபவம் மிக்கவர்.
இந்நூலில் நல்லகண்ணுவின் வரலாற்றுத் தடங்களை அதன் ஆழம்வரை சென்று நமக்குக் காட்டுகிறார். ‘கைதி எண் 9658’ என்பது நெல்லை சதி வழக்கில் கைது செய்யப்பட்ட நல்லகண்ணுவுக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு, வழங்கப்பட்ட எண். நல்லகண்ணு சிறை செல்வதற்கு முன்பான போராட்டங்கள், அடக்குமுறைகள், தலைமறைவு வாழ்க்கை, எங்கெங்கோ மறைந்து வாழும்போது உணவளித்துக் காப்பாற்றிய பெண்கள், நெல்லை சதி வழக்கில் சிக்கிய குடும்பங்களின் கண்ணீர் கதைகள் என விரிவாகப் பேசிச் செல்கிறார் மகேந்திரன்.