

ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது; ஒரு சரிதம் இருக்கிறது. ஆனால், எல்லாச் சரிதங்களுமே பதிவுசெய்யும் அளவுக்குத் தனித்துவமானவையாக இருப்பதில்லை.
சமூக நோக்கோடு வாழ்கிறவர்களின் சரிதங்களே வாசிப்புக்கும் சிந்தனைக்கும் சுவாரசியம் கூட்டுகின்றன. கற்பகதாசன் டாக்டர் ஸ்ரீதரனின் சுயசரிதையான ‘காற்றுக்கென்ன வேலி’யும் அவற்றுள் ஒன்று.
மயிலாடுதுறையில் வறுமை நிறைந்த குடும்பத்தில் பிறந்த ஸ்ரீதரன், மருத்துவத் துறையைக் குறிப்பாக ஆஸ்துமா சிகிச்சைப் படிப்பைத் தேர்ந்தெடுக்கக் காரணங்கள் உண்டு. ஸ்ரீதரனின் பள்ளிக்கால நண்பனின் தந்தை ஒரு மருத்துவர்.
அவர் மருத்துவமனைக்குள் நுழைகிறபோது காத்திருக்கும் நோயாளிகள் அனைவரும் எழுந்து கைகூப்பி வரவேற்பதை ஸ்ரீதரன் பார்த்தார். மருத்துவரானால் நமக்கும் இந்த மரியாதை கிடைக்கும் என்கிற எண்ணம் பள்ளி நாள்களிலேயே இவருடைய மனத்தில் உதித்தது.
ஸ்ரீதரனின் பெற்றோர் இருவருமே ஆஸ்துமா நோயாளிகள் என்பதால் மருத்துவப் படிப்பில் ஆஸ்துமா குறித்த சிறப்புப் படிப்பைப் படிக்க நினைத்தார்.