

“நெடிய பயணிப்பில் நிகழும் கண்டடைதலின் களிப்பு, குறுகியதிலும் உண்டு” எனக் கண்டுகொண்ட கவிஞர் ந.பெரியசாமி, குறுங்கதைகள் வாசிப்பிலும், எழுதுவதிலும் தனது கவனத்தைக் குவித்திருக்கிறார்.
அதன் வெளிப்பாடாகக் கிடைத்திருப்பதுதான் ‘காற்றுக் குடுவை’ எனும் இக் கதைத்தொகுதி. கவிதைகள், கட்டுரைகள், சிறார் கவிதைகள் எனத் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பவர் பெரியசாமி.
தொடர் வாசிப்பும், எழுத்துகளுமே ஓர் எழுத்துக் கலைஞரைத் (அவர் ஆணோ, பெண்ணோ, மாற்றுப் பாலினத்தவரோ யாராயினும்) தேங்கிப்போய் விடாமல் உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும். பெரியசாமியின் எழுத்துப்பயணம், இடையறாமல் தொடர் நீரோட்டமாய்ப் பிரவகித்துக் கொண்டே இருப்பவை.