

அன்றைய கோவை மாவட்டத்தின் தாராபுரத்தில் 1940இல் பிறந்த இரண்டு ஆளுமைகள் எஸ்.வி.ராஜதுரை (எஸ்.வி.ஆர்.), சு.தியடோர் பாஸ்கரன். இருவருமே தாம் தேர்ந்தெடுத்துக்கொண்ட துறைகள் சார்ந்து தமிழில் மிகக் காத்திரமான நூல்களை எழுதியவர்கள்.
தாங்கள் இயங்கிய துறைகளில் முன்னோடிகளாகச் செயல்பட்டவர்கள், இயங்கிவருபவர்கள். சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ‘தாராபுரம் தந்த இரு அறிவுக்கொடையாளர்கள்’ என்கிற இரண்டு நாள் கருத்தரங்கம் இவர்களுடைய வாழ்நாள் அறிவுப்பணி குறித்து கவனப்படுத்தும் வகையில் 2022இல் சிறப்பாக நடைபெற்றது.
இருவருக்கும் தற்போது 86 வயது. இருவரும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் ‘வரலாறும் நிகழ்கால அக்கறைகளும்’ என்கிற தலைப்பில் எஸ்.வி.ராஜதுரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 கட்டுரை களைக் கொண்ட தொகுப்பையும், ‘ஊருக்கு நூறு பேர்’ என்கிற தலைப்பில் சு.தியடோர் பாஸ்கரனின் தேர்ந்தெடுக்கப்பட்ட 17 கட்டுரைகள் கொண்ட தொகுப்பையும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வெளியிட்டுள்ளது.
ஓர் ஆசிரியரின் படைப்புகள் குறித்த ஒட்டுமொத்த சித்திரத்தை வழங்கும் ‘ரீடர்’ வகை நூல்கள் தமிழில் குறைவு. முக்கிய எழுத்தாளர்கள் அனைவருக்கும் செய்யவேண்டிய இப்பணியை இந்த இருவருக்கும் ரோஜா முத்தையா நூலகம் தொடங்கிவைத்துள்ளது.