

நவீனத் தமிழ்க் கவிஞர்களுள் ஞானக்கூத்தன் மிக முக்கியமானவர். நவீனக் கவிதைகளில் எதிர்ப்புக் கவிதைகள் என்ற மரபை வளர்த்தெடுத்ததில் இவருக்குக் குறிப்பிடத்தக்க இடமிருக்கிறது. தொல்காப்பியம், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள் என மரபிலக்கியத்தின் அனைத்து வகைமைகளிலும் ஆழ்ந்த புலமையுடையவர்.
மரபிலக்கியங்களின் போதாமைகளை எதிர்ப்புக் கவிதைகளாக எழுதியவர். மரபின் வேரிலிருந்து தனக்கான மொழியைத் தருவித்துக் கொண்டவர். மொழியின் அரசியலைக் கவிதைகளாக எழுதியவர். மரபையும் நவீனத்துவத்தையும் இணைத்துத் தனக்கென ஒரு கவிதை மரபைக் கண்டுபிடித்தவர். ஞானக்கூத்தன் எழுதிய கவிதைகளைவிட அவர் கவிதை சார்ந்து எழுதிய கட்டுரைகள் மிக முக்கியமானவை.
அவர் எழுதிய கட்டுரைகளும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றன. கட்டுரைக்குள்ளும் தம் கவிதை அரசியலைத் தீவிரமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
கவிஞர் நா.காமராசனின் ‘சூரியகாந்தி’, ‘கறுப்பு மலர்கள்’ ஆகிய இரு தொகுப்புக்கும் 1971இல் ‘கசடதபற’ இதழில் ஒரு சிறிய கட்டுரை எழுதியிருக்கிறார். அதில், ‘சோசலிசக் கவிஞரின் எழுத்துக்களில் சோசலிசமும் இல்லை, கவிதையும் இல்லை’ என்று கட்டுரையை முடித்திருக்கிறார்.