

மகாத்மா காந்தியின் எழுத்துக்களும் அவரைப் பற்றிய எழுத்துக்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணமே உள்ளன. காந்தி ஓர் பேராளுமை என்பதையும் கடந்து ஓர் அடையாளமாகவும், கருத்தியலாகவும் அவரை அணுகுவது அதிகரித்துள்ளது. அந்த வகையில் பேராசிரியர் கோ. விஜயராமலிங்கம் எழுதியுள்ள காந்தியத் தடம் எனும் நூல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்நூலில் பதினான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அதில் பதிமூன்று கட்டுரைகள் வரலாற்றில் காந்தியையும் அவர்தம் கருத்துக்களையும் விவாதிக்கும் புள்ளிகளாக அமைந்துள்ளன.
குறிப்பாக காந்தியும் அம்பேத்கரும், காந்தியும் பகத்சிங்கும், காந்தியும் நேதாஜியும், காந்தியும் வ.உ.சியும், காந்தியும் பெரியாரும் ஆகிய கட்டுரைகள் காந்திக்கும் அவர் காலத்தில் இந்திய விடுதலைக்களத்தில் நின்ற பிற ஆளுமைகளுக்குமான தொடர்புறவுகளை நுட்பமாக விளக்க முயல்கின்றன.