

இந்தியா முழுவதும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள இரண்டாம் கட்டத்
தகவல் சேகரிப்பு, சாதிவாரிக் கணக்கெடுப்பாக அமையும் எனத் தெரிகிறது.
இச்சூழலில், காலனிய காலத்தில் தமிழ்நிலத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகள் குறித்த விரிவான ஆய்வு நூலொன்று தமிழில் வெளிவந்திருப்பது சிறப்பானது.
டேனிஷ் தரங்கம்பாடியில் (1790-1834), பிரெஞ்சு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் (1822-1825), ஆங்கிலேய சென்னை மாகாணத்தில் (1871-1941) எடுக்கப்பட்ட மக்கள்தொகை மற்றும் சாதிவாரிக் கணக்கெடுப்புகளைப் பற்றிய ஜெயசீல ஸ்டீபனின் ஆங்கில நூல், உடனுக்குடன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பொதுவாக, மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் வரலாறு 1871இல் தொடங்கினாலும், இந்நூல் 1790ஆம் ஆண்டிலேயே தரங்கம்பாடியில் முதல் புள்ளி விவரங்கள் எடுக்கப்பட்டதை விவரிக்கிறது.
மக்கள்தொகை, தொழில், வீடமைப்பு என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இக்கணக்கெடுப்பில் அடிமைமுறை, சாதி, மதம், மொழி பற்றிய தரவுகள் பதிவாகியுள்ளன. மேலும், தரங்கம்பாடியில் 1702ஆம் ஆண்டிலேயே சமூக அளவீடுகள் நோக்கில் வீடுகள் குறித்த முதல் புள்ளிவிவர ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.