

நெல்லை வட்டாரத்தின் மேய்ச்சல் வாழ்வையும் தொன்ம தரிசனத்தையும் பேசுகின்றன ஏக்நாத் கதைகள். இது அவரது 4வது சிறுகதைத் தொகுப்பு. இதில் 4 கதைகள் சென்னைப் பெருநகரத்தையும். 6 கதைகள் நெல்லையையும் சார்ந்தவை. கதைகளில் நெல்லைமொழி மூச்சுக்காற்று போல உடன் வருகிறது.
‘கொட்டு’, ‘ஏவல் சாமிகள்’, ‘உமையாள்’ போன்ற கதைகளில் குலதெய்வ வழிபாடு உக்கிரமாய் வருகிறது. ‘கல் இருக்கை’ ‘குமிழிகள் உமிழும் சுழல்’ போன்ற கதைகளில் உறவுமுறைகள், நட்புமுறைகள் ஆசுவாசப்படுகின்றன. ‘தலைவன் கூற்றெனக் கொள்க’ சிறுகதையில் சைலப்பர் கோயில் தேர்த்திருவிழா ஒரு பின்னணியாக வருகிறது.
பழைய காதலி வள்ளிநாயகியை அடிக்கடி நினைத்துக்கொள்ளும், திருமணமான 50 வயது முத்துசாமி, தேர்த்திருவிழாவில் ஒரு பெண்ணைப் பார்த்து, தனது இளவயதுக் காதலியென நம்புகிறார். அப்பெண்ணை பின்தொடர்கிறார். சம்பிரதாயமான வடிவத்தில் குறுக்கிக் கொள்ளாமல், சுதந்திர வெளியை வைத்திருக்கிறது இச்சிறுகதை.