அம்பேத்கரைப் பற்றி இதுவரை அறிந்திராத புதிய பரிமாணம்
டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிந்தனை மரபை ஒரு புதிய கோணத்தில் புரிந்துகொள்ள ஸ்காட் ஆர். ஸ்டிரவுட் (Scott R. Stroud) எழுதிய ‘The Evolution of Pragmatism in India: An Intellectual Biography of B.R. Ambedkar’ என்ற நூல் பெரும் உதவியாக இருக்கிறது. பி.ஆர். அம்பேத்கர் ஓர் அரசியல் தலைவர் அல்லது சட்ட வல்லுநர் என்பதைத் தாண்டி, நவீன இந்தியாவின் அறிவுசார் சிற்பி (Intellectual Architect) என்பதை இந்நூல் ஆதாரங்களுடன் நிறுவுகிறது.
அம்பேத்கர் அமெரிக்காவில் பயின்ற காலம், அவரது சிந்தனைப் போக்கை வடிவமைத்த மிக முக்கியமான காலகட்டமாகும். குறிப்பாக, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அவரது பேராசிரியராக இருந்த ஜான் டூயி (John Dewey) என்பவருக்கும் அம்பேத்கருக்கும் இடையிலான அறிவுசார் பந்தம், இந்திய வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்த ஒரு தத்துவ அடித்தளத்தை உருவாக்க பெரும் துணையாக நின்றது.
நவீனக் கல்வியியலின் தந்தை என்று போற்றப்படும் ஜான் டூயி, ‘பிரக்மாடிசம்’ (Pragmatism - நடைமுறைவாதம்) என்னும் தத்துவத்தின் முன்னோடி. டூயியின் இந்தத் தத்துவம் அம்பேத்கருக்குள் ஏற்படுத்திய தாக்கம் என்ன, இந்தியச் சூழலுக்கு ஏற்ப அந்தத் தத்துவத்தை அம்பேத்கர் எவ்வாறு தகவமைத்து நடைமுறைப்படுத்தினார் என்பதை மிகவும் சுவாரசியத்துடன் இந்நூல் விவரிக்கிறது.
