

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 13-04-2022 அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். “நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அண்ணல் அம்பேத்கருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை தமிழில் வாசிக்க வாய்ப்பாக மொழி பெயர்த்து புதுப்பிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை விடுத்திருக்கிறார்.
அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழக அரசால் அண்ணலுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் செம்பதிப்பாக தமிழில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்” என்பதே அந்த அறிவிப்பாகும். பாபாசாஹேப் அம்பேத்கரின் ஆங்கிலப் படைப்புகளை புதிதாய் தமிழில் மொழிபெயர்த்து சிறந்த அச்சுத் தரத்தில் கெட்டி அட்டை புத்தகங்களாக வெளியிடப்படும் என்பதே முதலமைச்சர் தனது அறிவிப்பில் பயன்படுத்திய ‘செம்பதிப்பு’ என்ற வார்த்தைக்கான அர்த்தமாகும். புதிய மொழிபெயர்ப்புகளுக்கான பணிகளை 2024ஆம் ஆண்டு முழுவதும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம் தமிழ்நாடு அரசு மேற்கொண்டது.
மீண்டும் மொழிபெயர்ப்பு செய்வதற்கான காரணம்: 1992ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு Dr. Babasaheb Ambedkar Writings and Speeches எனும் ஆங்கில நூல் தொகுதிகளை தமிழ், இந்தி உட்பட ஏனைய இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் பணியை மத்திய அரசு தொடங்கியது. 16 ஆங்கில தொகுதிகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 37 தொகுதிகளாக வெளியிடப்பட்டன.
மத்திய அரசின் புத்தக வெளியீட்டுப் பிரிவு இதன் வெளியீட்டாளராக தொடக்கத்தில் இருந்தது. அதனை தொடர்ந்து டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் இத்தொகுதிகளை பதிப்பித்து வெளியிட்டது. இம்மொழிபெயர்ப்பு திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்குமான ஊதியத்தை மத்திய அரசு வழங்கியது. எனினும், இத்தொகுதிகள் தமிழில் சரிவர மொழிபெயர்க்கப்படாததால் அம்பேத்கரியம் பரவிட இத்தொகுதிகளே தடைக்கற்களாக மாறின. புரிதல்களும் குழப்பங்களும் பிணைந்தன.