க.நா.சு. எனும் விமர்சகன்மீது பட்ட கல்லடிகள்

க.நா.சு. எனும் விமர்சகன்மீது பட்ட கல்லடிகள்
Updated on
4 min read

சிறுகதை, நாவல், கவிதை, மொழிபெயர்ப்பு, இதழ்ப் பணி எனப் பல்வேறு இலக்கியச் செயல்பாடுகளுடன் தொடர்புடையவர் க.நா.சுப்ரமண்யம்; ஆனாலும் விமர்சகர் என்கிற நிலையிலேயே அதிகமும் கவனிக்கப்பட்டிருக்கிறார். தமிழில் புதிய விமர்சன மரபைக் கட்டமைக்க தன் வாழ்நாளின் இறுதிவரை முயன்றுகொண்டே இருந்தார்.

அவரது விமர்சன முறைமைகள் கடுமையான விமர்சனத்துக்குள்ளாயின. க.நா.சு.வின் விமர்சனத் தன்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் அவரது ஒட்டுமொத்த இலக்கியச் செயல்பாட்டையும் மழுங்கடிக்கும் வேலையைச் செய்தனர். மோசமான விமர்சனங்களை எதிர்கொண்ட படைப்பாளிகளில் க.நா.சு.வுக்கு முக்கிய இடமுண்டு.

க.நா.சு., 1934ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக எழுதிவந்தார். அவர் எழுதத் தொடங்கிய காலத்தில் ‘புனைகதை’ என்னும் நவீன இலக்கிய வடிவம் தமிழில் உருவாகிக் கொண்டிருந்தது. அப்போது மரபுக்கும் நவீனத்துக்குமான போராட்டங்கள் தீவிரமாக இருந்தன.

மரபுக்கவிதை, புதுக்கவிதை எனும் வடிவத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. இதில் க.நா.சு.வும் பங்கெடுத்துக் கொண்டார். நல்ல எழுத்தாளர்கள் பலரை அடையாளம் காட்டியதில் க.நா.சு.வின் பங்கு முக்கியமானது. இந்த இடத்திலிருந்துதான் அவரது இலக்கியச் சர்ச்சை ஆரம்பமானது. மரபிலக்கியத்தின் போதாமைகளைச் சுட்டிக்காட்டினார். வணிக எழுத்தாளர்களை விமர்சனத்துக்கு உள்ளாக்கினார்.

இந்தத் தன்மைகள் எல்லாம் சேர்ந்துதான் க.நா.சு.வுக்கு இலக்கிய எதிரிகளின் எண்ணிக்கையைக் கூட்டியது. பாரதியாரின் கவிதைகளுடன் தங்களது நவீன இலக்கிய ஆர்வத்தை நிலைநிறுத்திக்கொள்ளும் இலக்கியவாதிகள்தாம் க.நா.சு.வுக்குப் பெரிய தலைவலியாக இருந்தார்கள்.

அதேநேரத்தில் நவீன இலக்கியவாதிகளுக்கும் மரபிலக்கியத்தின் வேர் தெரிந்திருக்க வேண்டும் என்பதிலும் க.நா.சு. கண்டிப்புடன் இருந்தார். இப்படி இரு தரப்பிலும் பிரச்சினைகளை எழுதிச் சம்பாதித்துக்கொண்டார் க.நா.சு.

மார்க்சிய எதிரியா க.நா.சு.? - க.நா.சு. தனது தொடர்ச்சியான வாசிப்பினூடாகப் புதிய புதிய எழுத்தாளர்களையும் நூல்களையும் அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். இதுதான் அவர் செய்த பணிகளில் மகத்தானது. க.நா.சு.வின் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறாதவர்கள் திட்டமிட்டு அவர்மீது விமர்சனத்தை உருவாக்கினர்.

ஆனால், உள்ளுக்குள் அவரது பட்டியலில் இடம்பெற்றுவிட வேண்டும் என்கிற விருப்பம் இருந்ததையும் பார்க்க முடிகிறது. க.நா.சு.வை எதிரியாகக் கட்டமைத்துக் கொண்டவர்கள் தங்களுக்கென ஒரு நியாயத்தைத் தர்க்கமில்லாமல் உருவாக்கிக் கொண்டனர்.

‘திடீர்த் திடீர் எண்ணம் தோன்றும் சலனப் புத்தியுள்ளவர் க.நா.சு.’ என்பது போன்ற கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் க.கைலாசபதி. இவர், க.நா.சு.வை மார்க்சிய இலக்கியத்தின் எதிரியாகக் கட்டமைத்துக் கொண்டார். ‘மார்க்சியமே தெரியாத நான் எப்படி மார்க்சிய விரோதியாக இருக்க முடியும்’ (‘படிகள்’ பேட்டி) என்பது க.நா.சு.வின் வாதம்.

விமர்சித்தவருக்குச் சமர்ப்பணம்: க.நா.சு. தன்மீது வைக்கப்பட்ட மோசமான தனிமனிதத் தாக்குதல்களுக்குக்கூடப் பெரிய எதிர்வினைகளை நிகழ்த்தியதில்லை. குறிப்பாக க.நா.சு.வை விமர்சிப்பதற்காகவே தனி நூலொன்றை (‘திறனாய்வுப் பிரச்சினைகள்’) க.கைலாசபதி எழுதியுள்ளார். ‘ஞானரதம்’ இதழ் வெளியிட்ட ‘க.நா.சு. மணிவிழா சிறப்பிதழ்’ க.கைலாசபதியை மிகுந்த தொந்தரவுக்கு உள்ளாக்கியிருக்கிறது.

‘ஞானரதம்’ இதழில் க.நா.சு. குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகளுக்கான விமர்சனமாகவே இந்நூல் அமைந்திருக்கிறது. க.நா.சு.வுடன் பழகிய குற்றத்துக்காக டி.கே.சி., சுந்தர ராமசாமி உள்ளிட்ட அவரது நண்பர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். ‘தனக்கிருக்கும் (சுமாரான) ஆங்கில இலக்கிய அறிவைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவும் உலக இலக்கியம் பற்றிய பேச்சு அவருக்கு உதவுகிறது’ என்று ஓரிடத்தில் எழுதியிருக்கிறார் கைலாசபதி. ‘சுமாரான’ என்கிற சொல் வன்மம் நிறைந்தது.

கைலாசபதியின் மீதான மதிப்பையும் அச்சொல் சேர்த்தே வீழ்த்துகிறது. இந்நூல் 1980இல் வெளிவந்தது. நாடோடியான க.நா.சு. மொழிபெயர்ப்பாளர் அ.கி.ஜெயராமனின் வீட்டில் தங்கியிருந்தபோது (1985) ‘நாவல் கலை’ என்கிற நூலை எழுதினார். அதன் முன்னுரையில், ‘என் நண்பர் டாக்டர் கே.கைலாசபதியின் தமிழ் நாவலைப் பற்றிய நூல், இந்நூல் எழுதத் தூண்டுதலாக இருந்தது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். க.நா.சு.வின் இந்தப் பெருந்தன்மை குறிப்பிடத்தக்கது. நண்பர்கள் இந்நூலுக்கு மறுப்பெழுதச் சொல்லியும் அவர் எழுதவில்லை. விமர்சனத்துக்கு விமர்சனம் தேவையில்லை என்பதைத் தம் கொள்கையாகக் கொண்டிருந்தார்.

கல்லடிபட்ட பசுமை: க.நா.சு.வின் புத்தக அடுக்குகளை ஆராயுமளவுக்கு உரிமை பெற்றிருந்த பிரமிள், க.நா.சு.வுக்கு ஆங்கிலத்தையும் தமிழையும் தவிர வேறெந்த மொழியும் தெரியாது என்று பகடி செய்திருக்கிறார். க.நா.சு.வுடன் நெருக்கமாகப் பழகிய தஞ்சை ப்ரகாஷ், க.நா.சு. பிரெஞ்சு மொழியையும் ஜெர்மன் மொழியையும் கற்றார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்) என்று எழுதியிருக்கிறார்.

க.நா.சு.வுக்குப் பல மொழிகள் தெரியும், தெரியாது என்பதல்ல பிரச்சினை. பிரமிள் இந்த விஷயத்தை அணுகியிருக்கும் விதம்தான் க.நா.சு. மீதான அவரது வெறுப்பை வெளிப்படையாகக் காட்டுகிறது. ‘க.நா.சு.வை நேரில் அறிந்த எல்லாருக்குமே - நா.பா. ஈறாக - க.நா.சு.வின் பன்மொழி ஞான லட்சணம் தெரியும்’ என்று எழுதியிருப்பதை க.நா.சு. மீதான விமர்சனமாக மட்டும் எப்படிக் கருத முடியும்? ‘அவரது மொழிபெயர்ப்புகளில் அவசரமும் அசிரத்தையும் அதிகம்’ என்று க.நா.சு.வின் ‘சுமாரான’ ஆங்கில அறிவையும் பிரமிள் கிண்டல் செய்திருக்கிறார்.

பிரமிள், ‘க.நா.சு. தொடர்ச்சியாக ஒரு பத்தி அளவு மூலத்தைப் படித்துவிட்டு அதன் கருத்தைத் தமது சொற்களில் அப்படியே தருகிற உத்தியைத்தான் பெருமளவுக்குக் கையாண்டிருக்கிறார்’ (க.நா.சு. இலக்கியத்தடம்) என்று எழுதியிருக்கிறார். க.நா.சு.வின் இலக்கிய இடம் குறித்து நகுலன் எழுதிய ஒரு கவிதை, க.நா.சு. பற்றி எழுதப்படும் நூல்களில் தவறாமல் இடம்பெறும். அந்தக் கவிதையின் தொனி பிரமிள் எழுதிய கட்டுரையிலும் இடம்பெற்றுள்ளது. பழுத்த மரத்தின்மீதே கல் எறிவார்கள்.

இது க.நா.சு.வுக்கு முழுமையாகப் பொருந்தும். ‘தன் கைக்குக் கிடைக்கக்கூடிய அனைத்துப் படைப்புகளையும் மிகுந்த தீவிரத்தோடு படித்திருக்கிறார்’ என்று அசோகமித்திரனும் ‘தமிழ் கூறும் நல்லுலகம் கண்டிராத அபாரமான வாசகர்’ என்று அம்ஷன் குமாரும் க.நா.சு. பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். க.கைலாசபதி போன்று பிரமிளும் க.நா.சு.வைத் திட்டமிட்டே தாக்கி எழுதியுள்ளார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவரவர்களுக்கு அவரவர் நியாயம். ‘போகட்டும் விட்டுத்தள்ளுங்கள்’ என்று க.நா.சு. இவற்றையெல்லாம் கடந்து இயங்கியிருக்கிறார்.

பிரமிள் இன்னொரு பிரச்சினையையும் தம் கட்டுரையில் எழுப்பியிருக்கிறார். ‘புதுமைப்பித்தன் பிராமணர் அல்ல என்கிற காரணத்துக்காக, அவரது எழுத்தை மட்டம் தட்டும் போக்கு இவர்களிடம் இருந்திருக்கிறது’ என்கிற குற்றச்சாட்டைக் க.நா.சு.உள்ளிட்ட அவரது குழுவினர் மீது முன்வைக்கிறார். புதுமைப்பித்தன் எழுதிய கதைகளில் முப்பது கதைகளை மட்டுமே மிகச்சிறந்த கதைகள் என்று அவர் கூறியதுதான் மேற்கண்ட கருத்துக்குக் காரணம்.

புதுமைப்பித்தனைத் தன் வாழ்நாளின் இறுதிவரை தூக்கிச் சுமந்தவர் க.நா.சு. ‘புதுமைப்பித்தனைத் தமிழகம் மறக்காது - மறுக்காது’ என்று எழுதினார் க.நா.சு. மேலும், அவரது ‘சாபவிமோசனம்’ தமிழுக்குத் தனியாக வந்து வாய்த்த ஒரு சிறுகதை உருவம்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார். புதுமைப்பித்தன் தமிழ்ச் சிறுகதையின் ஓர் அடையாளம். இந்த அடையாளத்தை க.நா.சு.வை விமர்சிப்பதற்கு பிரமிள் பயன்படுத்திக் கொள்கிறார்.

பிரமிளின் வன்மம்: நவீனத் தமிழ் இலக்கியத்தில் சாதி எப்போதும் ஒரு பிரச்சினையாக இருந்துவருகிறது. பிரமிள் அதனையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். ‘தமிழ்ச் சிறுகதை வரலாறு பாரதியார், வ.வே.சுப்ரமணியம் உள்ளிட்டோரிடமிருந்து தொடங்குகிறது’ என்பது ஒரு தரப்பு; காத்திரமான தமிழ்ச் சிறுகதை மரபு புதுமைப்பித்தனிலிருந்தே தொடங்குகிறது என்பது மற்றொரு தரப்பு.

இரு தரப்பினரின் பார்வைக்குப் பின்னும் சாதிய அரசியல் மறைமுகமாகச் செயல்படுவதை அவதானிக்கலாம். க.நா.சு. மீதும் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பல நேரங்களில் கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாதவர்கள், புகலிடம் தேடும் இடமாகவும் இலக்கியத்தில் சாதி பயன்பட்டுவருகிறது. க.நா.சு.வுக்கும் தான் சாதியால் விமர்சிக்கப்படுகிறோம் என்ற புரிதல் இருந்திருக்கிறது. ‘கைலாசபதி பண்டிதர். பிராமணர் அல்லாதவர். கம்யூனிஸ்ட். நான் கம்யூனிசத்தை எதிர்ப்பவன். இந்த மாதிரி வேறுபாடுகள் இருக்கின்றன என்று சாமிநாதன் சுட்டிக்காட்டினார்’ என நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

க.நா.சு. மீதுள்ள கோபத்தின் காரணமாக அவரது படைப்புகளைக் கடுமையாக விமர்சிக்கும் போக்கும் தமிழ்ச் சூழலில் இருந்திருக்கிறது. அவர் எழுதியவை இன்னும் முறையாகக் கண்டெடுத்து அச்சிடப்படவில்லை. அவரது பல ஆக்கங்கள் மறுபதிப்புகளைக் காணவில்லை. சாகித்ய அகாடமி விருது தவிர பெரிய அங்கீகாரங்கள் அவருக்கு அளிக்கப்படவில்லை. ஆனால், ஈழம்வரை அவர் பகையை சம்பாதித்து வைத்திருந்தார்.

‘க.நா.சு.வைப் பற்றிய மதிப்பீட்டில் கைலாசபதி ஆய்வு நிதானத்தைக் கடைபிடிப்பதற்கு மாறாக, ஒரு வகை அரசியல் மனப்பாங்கையே வெளிப்படுத்தியிருக்கிறார்’ என்று எம்.ஏ.நுஃமான் (‘சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்’) குறிப்பிட்டிருக்கிறார். எம்.ஏ.நுஃமான், காலம் கடந்து இந்தப் புரிதலை அடைந்திருக்கிறார்.

க.நா.சு.வின் பங்களிப்பைக் காய்தல் உவத்தல் இன்றி ஆராய்ந்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அவர் நவீன இலக்கியத்தின் மையமாகச் செயல்பட்டார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

- சுப்பிரமணி இரேமஷ் கவிஞர் | இலக்கிய விமர்சகர்; தொடர்புக்கு: ramesh5480@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in