Last Updated : 17 Dec, 2016 11:26 AM

 

Published : 17 Dec 2016 11:26 AM
Last Updated : 17 Dec 2016 11:26 AM

நல் வரவு: இவர்தான் லெனின்

இவர்தான் லெனின்
(கட்டுரைகள், கதைகள், குறிப்புகள்)
சிந்தன் புக்ஸ் வெளியீடு,
சென்னை- 86.
9445123164

சோவியத் ரஷ்யாவின் நிறுவனர் லெனின் பற்றிய கட்டுரைத் தொகுப்பு இது. கொள்கைப் பற்று, அர்ப்பணிப்புடன் உழைத்தல், சமூகத்துக்காகத் தியாகம் செய்தல், ஏழைகளிடமிருந்து விலகாத எளிமை ஆகியவையே லெனினின் தலைமைப் பண்புகள். அவற்றை, அவரோடு பழகியவர்கள் உணர்ந்ததன் தொகுப்புதான் இது. ‘தாய்’ நாவல் உருவான விதம் பற்றி எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியும் லெனினும் பேசிக்கொண்டதை நம்மோடு பகிரும் நினைவுக் கட்டுரை சுவையானது. நவம்பர் புரட்சியின் நூற்றாண்டையொட்டி வெளியிடப்பட்டுள்ளது.



செய்தி உலகம்,
எஸ்.பி. எழிலழகன்,
விலை: ரூ. 190
என்.சி.பி.எச்., சென்னை-98,
044 26241288

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி-மக்கள் தொடர்புத் துறையின் கூடுதல் இயக்குநராகப் பணிபுரியும் நூலாசிரியரின் இரண்டாவது புத்தகமான இது ‘செய்தித்துறை அலுவலர்களுக்கும் இதழியல் மாணவர்களுக்கும் பயனளிக்கும் நோக்கத்தில்’ எழுதப்பட்டிருக்கிறது. நூலாசிரியரின் 30 ஆண்டுக் கால அனுபவம் இந்நூலை நன்கு தொகுக்க உதவியிருக்கிறது. இந்தத் துறையின் வெவ்வேறு பணிகளை அத்தியாயவாரியாக நூல் விளக்குகிறது. அதே நேரத்தில் நூலில் உள்ள தரவுகள் போதாது என்பதையும் சொல்லியாக வேண்டும்!



செவ்விலக்கிய மீட்பர் சி.வை.தாமோதரம் பிள்ளை
மு.முனீஸ்மூர்த்தி
விலை ரூ.90
என்.சி.பி.ஹெச்.,சென்னை- 98
044-26251968

இலங்கையைச் சேர்ந்த சிறுப்பிட்டி வைரவநாதன் தாமோதரன்தான், இன்றைக்கு செவ்விலக்கியப் பதிப்புகள் குறித்து பேசும் யாராலும் தவிர்க்க முடியாத பெயரான சி.வை. தாமோதரம் பிள்ளையாகவும் மாறினார். சி.வை.தா-வின் இளமைப் பருவம் தொடங்கி, அவரது பதிப்புத் துறை செயல்பாடுகள், அவர் பெருமுயற்சியெடுத்துத் தேடிக் கண்டெடுத்து பதிப்பித்த நூல்கள், இறையனார் அகப்பொருளின் முகப்பு என அனைத்தையும் பேரார்வத்தோடு தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர்.



புறாக்காரர் வீடு
பாலகுமார் விஜயராமன்
விலை ரூ.80
நூல்வனம், சென்னை-89
9176549991

அவரவர் அனுபவமே அவரவருக்கான வாழ்க்கையாகிறது. அப்படியாய், தனக்கான பார்வையில் படும் சிறிய சம்பவங்களையும் நேர்க்கோட்டுச் சித்திரங்களாக்கியுள்ளார் கதாசிரியர். இந்நூலிலுள்ள 14 சிறுகதைகளுக்குள்ளும் பொதிந்துள்ள சாரம்சத்தை, தனது வசீகரமான மொழிநடையால், வாசகருக்குள் கடத்திவிடுவதில் வெற்றி பெற்றுள்ளார். புறாக்காரர் வீடு, முதல் தாயம் ஆகிய இரு கதைகளும் நூலை வாசித்து முடித்த பிறகும் நம் நினைவில் தங்கிவிடுகின்றன.



பெருந்தச்சன்
எம்.டி.வாசுதேவன் நாயர்
தமிழில்: ஸ்ரீபதி பத்மநாபா
விலை ரூ.130
புது எழுத்து, காவேரிப்பட்டிணம் 635112
9842647101

மலையாளத்தின் மூத்த எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதி, பரவலான பாராட்டைப் பெற்ற ‘பெருந்தச்சன்’ எனும் மலையாள திரைப்படத்தின் திரைக்கதை தமிழில் நூலாகியுள்ளது. மரபை ஒட்டி ஒழுகும் தச்சர் ஒருவருக்கும் அவருக்கு நேரெதிரான குணாம்சங்களைக் கொண்ட அவரது மகனுக்கும் இடையிலான போராட்டம் கதையில் அருமையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபாவின் மொழிபெயர்ப்பில் வாசிப்புக்குத் தடையற்ற சரளமான மொழி ஓட்டத்தில், ஒரு திரைப்படம் பார்ப்பது போன்றதொரு உணர்வூக்கத்தைத் தருகிறது இந்த திரைக்கதை நூல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x