

அக்காக் குருவி, மழையின் நடனம், சேவல்கார மாமா என்றெல்லாம் எளிய மொழியில் வாழ்வின் எளிய கணங்களைச் சொல்லும் கவிதைகளுக்குச் சொந்தக்காரர் ஆகாசமுத்து. அவரது முதல் தொகுப்பான ‘மிளிர்கொன்றைக் கோடை’யிலிருந்து ஒரு கவிதை இங்கே…
தவளைத் தோழனின் அழைப்பு
அன்றொரு கோடை மழைக் கொதுங்கிய
தாடை தாழ்ந்தடங்கும் அந்த இளந்துறவி
வீட்டுக் கதவைத் திறக்க
அடுக்களைக்குத் துள்ளி மறையும்
வெந்தனிமைப் பொழுதுகளை
க்ரக்… க்ரக்… சப்தங்களால் துடைத்தழிக்கும்
அடுக்களை அலமாரியின் கீழ்த்தட்டில்
தரையொட்டித் தூங்கும்.
கைகளில் அகப்பட ஒப்புக் கொடுத்து
குழைந்து கெஞ்சின அதன் கண்கள்.
பக்கத்து அடுக்குமாடிக் குடியிருப்பின்
குரோட்டன் செடிகளுக்குள் விட்டிருந்தேன்.
நேற்று நள்ளிரவும் புகுந்தெழுப்பிய அதனை
சிறு குச்சியால் விரட்ட
பள்ளி வாகனத்தில் ஏறும் குழந்தையென
நடையேறிப் போனது.
இந்த இரவின் தெருவில்
சிதைந்தவொரு காலுடன் இழுத்து இழுத்து ஊர்ந்தது.
அந்த ஒன்றுதான் மற்றெல்லாமானதோ.
நிசப்தகுளம் புகுமா தோழா
இந்தச் சாலை வெள்ளம்.
மிளிர்கொன்றைக் கோடை
ஆகாசமுத்து
விலை: ரூ. 80
புதுஎழுத்து வெளியீடு, காவேரிப்பட்டிணம்-635112.
தொடர்புக்கு: 98426 47101