Published : 10 May 2016 12:15 PM
Last Updated : 10 May 2016 12:15 PM

நான் என்ன படிக்கிறேன்?- பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

சின்ன வயசிலேயே எனக்குப் புத்தகம் படிக்கிறதில தீராத ஆர்வமுண்டு. மதுரை பக்கத்தில இருக்கும் சோழவந்தான் நான் பிறந்த ஊரு. அங்கே நான் படிச்ச பள்ளிக்கூடத்தில வாரம் ஒருமுறை நூலகத்திலருந்து புத்தகம் எடுத்துப் படிக்கலாம்.

“பழைய புத்தகம் கிழிஞ்சி போயிடும். புதுப் புத்தகம்ன்னா நீங்க கிழிச்சிடுவீங்க”ன்னு சொல்லி நூலகரு தர மாட்டாரு. அதனால அவரு சொல்லாமலேயே தண்ணீர்ப் பிடிச்சு பித்தளைப் பாத்திரத்தில ஊத்துவேன். அப்பத்தான் படிக்கப் புத்தகம் எடுக்க விடுவாரு. எனக்குப் பிடிச்ச புத்தகம் நூலக அடுக்கில எங்கே இருக்குன்னு முதல்லேயே பார்த்து வச்சிக்குவேன். படக்கதைகள், அம்புலிமாமா, துப்பறியும் கதைகள் இதெல்லாம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

எங்க ஊர்லயும் சிறிய நூலகம் ஒண்ணு இருந்துச்சு. பள்ளிக்கூடம் லீவுன்னா உடனே நூலகத்துக்குப் போயிடுவேன். நூலக வாசல்ல பதிவேட்டில கையெழுத்துப் போடுறதில அப்படியொரு சந்தோசம் எனக்கு. புத்தகம் படிக்க ஆரம்பிச்சிட்டா கையிலே கிடைக்கிற எல்லாப் புத்தகத்தையும் படிப்பேன். தமிழாசிரியரா இருந்த அப்பாவுக்கு உரைநடை அவ்வளவா பிடிக்காது. ஆனா, நான் உரைநடை, கவிதை, வரலாறு, சமூகம் என எல்லாத்தையும் படிப்பேன்.

எங்க பக்கத்து வீடுகள்ல வாரப் பத்திரிகைகள்ல வர்ற தொடர்கதை, படக் கதைகளை பைண்டிங் செஞ்சு வச்சிருப்பாங்க. அவங்க வீட்டில சொல்ற வேலைகளை நாம செஞ்சா, அந்த பைண்டிங் புத்தகங்களைப் படிக்கத் தருவாங்க. அதுவும் அவுங்க வீட்டு வராந்தாவிலேயே உக்காந்து படிச்சிட்டுக் கொடுத்திடணும். அப்படித்தான் பல நூல்களைப் படிச்சேன்.

சங்க இலக்கிய நூல்கள் தொடங்கி, சமகால இலக்கியம்வரை எல்லாத்தையும் விடாம படிச்சிக்கிட்டுவர்றேன். கல்கி, மாதவையா, புதுமைப்பித்தன், சுஜாதா, ரா.கி.ரங்கராஜன் எழுதிய படைப்புகளையெல்லாம் படிச்சி, பெரிதும் வியந்திருக்கேன்.

எனது பயணம் எப்போதும் புத்தகங்களால நிறைஞ்சிருக்கும். படிக்க கையில் ஒரு புத்தகமும், குடிக்கக் கொஞ்சம் தண்ணீரும் இருந்துவிட்டாலே போதும். நான் பயணிப்பது பேருந்தா, ரயிலா, விமானமா என்று தெரியாது. நான் பயணப் பொழுதில் படிக்கும் புத்தகத்தின் மீதேறி, அது காட்டும் உலகில் சஞ்சரித்துக்கொண்டிருப்பேன்.

மு. அருணாசலம் எழுதிய ‘தமிழ் இசை இலக்கிய வரலாறு’, ‘தமிழ் இசை இலக்கண வரலாறு’ எனும் இரு நூல்களையும் சமீபத்தில் படிச்சேன். தமிழிசை வரலாற்றைப் பற்றிய மிக முக்கியமான நூல்களான இந்த இரு தொகுதிகளும் சுமார் 1,400 பக்கங்களைத் தாண்டும். பல்லாண்டு காலமாகப் பதிப்பிக்கப்படாமலிருந்த இந்த இசை வரலாற்றுப் புத்தகங்களை இப்போ கடவு பதிப்பகம் வெளியிட்டிருக்கு.

சங்க இலக்கியம் தொடங்கி இருபதாம் நூற்றாண்டு வரையிலான இசை வரலாற்றை 17 அத்தியாயங்கள்ல முதல் தொகுதி பேசுது. இசைத் தமிழின் இலக்கண வரலாற்றை 16 அத்தியாயங்கள்ல பேசுது இரண்டாம் தொகுதி. இத்தொகுதிகளின் பிற்பகுதியில இசைவாணர்களின் வாழ்க்கை வரலாறும் இணைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

என் வீட்டில மிக முக்கியமான தமிழ் நூல்கள் 3,000-க்கும் மேல் சேகரிச்சு வெச்சிருக்கேன். என் மாணவர்கள் அதை ‘அமுதகத்தின் அறிவகம்’ என்பார்கள். யார் வந்தாலும் படிக்கவும், பரிமாறவும் காத்திருக்கின்றன என் நூலகத்தோட புத்தகங்கள்.

- கேட்டு எழுதியவர்: மு.முருகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x