

பாத்திரங்களை மிதிவண்டியில் சுமந்து சென்று விற்கும் கா.ஜோதி கவிதை, கதை, இசைப் பாடல்களைப் படைத்தல், பாட்டுப் பாடுதல் எனப் பல திறமைகளைக் கொண்டவராகவும் தமிழ் மீது தீராத பற்றுக் கொண்டவராகவும் இருக்கிறார்.
2018-ல் இவருடைய கவிதைத் தொகுப்பும் 2020-ல் இவர் எழுதிய 100 ஒரு பக்கக் கதைகளின் தொகுப்பும் வெளியாகின. இசை, பாடல்கள் மீது ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட ஜோதி பல்வேறு தலைப்புகளில் பாடல்களை இயற்றி, அவற்றை இலக்கியக் கூட்டங்களில் பாடும் திறனையும் வளர்த்துக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் இயற்றிய பாடல்களின் தொகுப்பே இந்நூல்.
ஒரு சாமானியனின் பாடல்கள், கா.ஜோதி
வெளியீடு: கவிநிலா பதிப்பகம், திருப்பூர் - 641 603
விலை: ரூ.140, தொடர்புக்கு: 98431 22403
கரோனா ஊரடங்குக் காலத்தில் உலகை வலம்வந்த வழிப்போக்கனின் பார்வையிலிருந்து கிடைக்கும் சித்திரங்கள் இந்நூலில் கவிதைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அறிமுகப் பத்து, நடைப் பத்து என பத்து பத்துகளாக பதிக மரபில் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இது நூலாசிரியரின் 13-வது கவிதைத் தொகுப்பு இது.
பனித்துளிக்குள் உறையும் காலம், சேதுபதி
வெளியீடு: மஹாகவிதை, விற்பனை உரிமை: முல்லை பதிப்பகம், சென்னை - 600 040
விலை: ரூ.100, தொடர்புக்கு: 9840358301
ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அகிம்சை வழியில் குரல்கொடுத்த அனைவருமே புரட்சியாளர்கள்தான் என்னும் நோக்கில் இயேசு கிறிஸ்துவைப் புரட்சியாளராக இந்நூலாசிரியர் முன்வைக்கிறார். அதோடு, அவருடைய புரட்சிகரமான சிந்தனைகளை ஆய்வுக்கு உட்படுத்தி, அவை பெண்களுக்கு இந்தச் சமூகம் இழைத்த கொடுமைகளை உடைத்தெறிவனவாக எப்படி அமைந்தன என்பதை விளக்குகிறார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பெண்ணியச் சிந்தனைக்கு வித்திட்ட புரட்சியாளராக இயேசுவை முன்னிறுத்துகிறார்.
பெண்ணியம் பேசிய முதல் புரட்சியாளர்
தேவகோட்டை ராசு, வெளியீடு: வாழ்க்கை சட்டம், சென்னை - 600 093, விலை: ரூ.50
தொடர்புக்கு: 044- 2376 4556
இறைவனைப் போற்றிப் பாடி மலர்களால் அர்ச்சனை செய்வது இந்துக்களின் இறைவழிபாட்டில் முக்கியமான அங்கம். தமிழர்கள் இறைவனைப் போற்றவும் அர்ச்சிக்கவும் தமிழையே பயன்படுத்த வேண்டும் என்று திருஞானசம்பந்தர் உள்ளிட்ட சமயச் சான்றோர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர். அந்த வகையில் விநாயகர், முருகன், சிவன், பராசக்தி, விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி, அனுமன், ஐயப்பன் உள்ளிட்ட பல்வேறு கடவுளர்களுக்கான தமிழ் அர்ச்சனைகள் இந்த நூலில் வழங்கப்பட்டுள்ளன.
வாழ்வில் வளம்பெற
தமிழ் மந்திர அர்ச்சனை பூக்கள்
ஆர்.உமாமகேஸ்வரி
வெளியீடு: நர்மதா பதிப்பகம், சென்னை - 600 017
விலை: ரூ.110, தொடர்புக்கு: 9840226661
இந்த நூலில் இஸ்லாமிய மதத்தின் புனித நூலான திருக்குர்ஆனின் துணைகொண்டு அகிம்சையின் முக்கியத்துவத்தை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். குரான் வரிகளை மேற்கோள் காட்டி, அகிம்சையின் முக்கியத்துவத்தை மட்டுமல்லாமல் வன்முறையின் பல்வேறு வடிவங்களையும் அவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இஸ்லாம் எப்படி வலியுறுத்தியுள்ளது என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
அகிம்சை - இஸ்லாமியக் கண்ணோட்டம்
டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்
வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்,
சென்னை - 600 012, விலை: ரூ.80
தொடர்புக்கு: 86680 57596
| சென்னை கே.கே.நகரில் புத்தகக்காட்சி: சென்னை கே.கே.நகரில் மே 13 அன்று தொடங்கிய புத்தகக்காட்சி ஜூன் 12 வரையிலும் நடைபெறவிருக்கிறது. 5 ஆயிரம் தலைப்புகளில் 5 லட்சம் புத்தகங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அனைத்து நூல்களும் 10% தள்ளுபடியில் கிடைக்கின்றன. இடம்: ஸ்ரீவிஸ்வகர்மா மினி மஹால், பி.டி.ராஜன் சாலை, கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகில். நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை. அனுமதி இலவசம். |
| ராஜபாளையம் புத்தகக்காட்சி: ராஜபாளையத்தில் மதுரை மீனாட்சி புக் ஷாப், முன்னேற்றப் பதிப்பகம் இணைந்து நடத்தும் புத்தகக்காட்சி ஜூன் 6 அன்று தொடங்கியது. இந்தப் புத்தகக்காட்சி ஜூன் 19 வரை நடைபெறவிருக்கிறது. அனைத்து நூல்களும் 10% தள்ளுபடியில் கிடைக்கின்றன. இடம்: காந்தி கலை மன்றம், நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை. அனுமதி இலவசம். |