

யுகோஸ்லாவியா, செக்கஸ்லோ வாகியா, கிழக்கு ஜெர்மனி உள்ளிட்ட உலக வரைபடத்திலிருந்து காணாமல் போன நாடுகள்; சோவியத் ஒன்றியம்போல் சிதறுண்ட நாடுகள்; சுவிட்சர்லாந்து, எஸ்தோனியா போன்ற ஆச்சரியமான வரலாற்றைக் கொண்ட நாடுகள் எனப் பல நாடுகளின் கதைகளைச் சொல்வதன் மூலம் உலகில் தேசங்கள் எப்படி உருவாகின்றன, எப்படிச் சிதைந்துபோகின்றன என்பது குறித்த பார்வையைத் தரும் நூல்.
காணாமல் போன தேசங்கள் | நிர்மல்
வெளியீடு: எழுத்து பிரசுரம், சென்னை - 600 040
விலை: ரூ.140
தொடர்புக்கு: 9840065000
புத்தரின் அருள் வாக்குகளின் தொகுப்பான தம்மபதம் இந்தியாவின் மிக முக்கியமான சமய நூல் மட்டுமல்ல, அது ஒரு மதிப்புமிக்க நீதிநூலும் இலக்கியமும்கூட. பாலி மொழியில் உள்ள தம்மபதத்துக்கு ஏற்கெனவே தமிழ் மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன என்றாலும் தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், மூல நூலின் சாரத்தைக் குலைக்காமல் எளிய சொற்களுடன் ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
தம்மபதம் - பெளத்த அறநூல்
மொழிபெயர்ப்பு: நல்லி குப்புசாமி செட்டியார்
வெளியீடு: பிரெய்ன் பேங்க், சென்னை - 17
விலை: ரூ.75
தொடர்புக்கு: 98410 36446
எழுத்தாளரும் இலக்கிய விமர்சகரும் ‘நவீன விருட்சம்’ உள்ளிட்ட இலக்கிய இதழ்களை நடத்தி வருகிறவருமான அழகியசிங்கர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. புதுமைப்பித்தனின் ‘சணப்பண் கோழி’, பிரபஞ்சனின் ‘பகல் நேர நாடகம்’, சுஜாதாவின் ‘சில வித்தியாசங்கள்’, ராஜேஷ்குமாரின் ‘நேற்றைப் போல் இன்றில்லை’ உள்ளிட்ட தான் வாசித்த சிறுகதைகளின் சுருக்கமான மறுகூறல் செய்து தன்னுடைய அவதானிப்புகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஒரு கதை - ஒரு கருத்து (தொகுதி 1) | அழகியசிங்கர்
வெளியீடு: விருட்சம், சென்னை - 600 033
விலை: ரூ.110
தொடர்புக்கு: 9444113205
அரியலூர் மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்தவரும் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் இயற்பியல் முதுநிலை மாணவியுமான இ.அமிதாவின் முதல் கவிதைத் தொகுப்பு இது. கல்லூரி, மாநில அளவிலான கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றிருக்கிறார். தமிழ் இலக்கிய அமைப்புகள், முதியோர் கல்வி வழங்குதல் ஆகிய பணிகளிலும் முனைப்புடன் பங்கேற்றுவருகிறார்.
மெளனம் உதிர்த்த மழைத்துளிகள் | இ.அமிதா
வெளியீடு: பைந்தமிழ் இலக்கியப் பேரவை, ஆண்டிபட்டி, தேனி மாவட்டம்
விலை: ரூ.100
தொடர்புக்கு - 98422 93915
பத்து வயதிலிருந்தே கேமராவைப் பிடித்தபடி அலையத் தொடங்கிய கிறிஸ்டோபர் நோலன், அணு உலைக்கு எதிராகக் குரல் கொடுத்த கிம் கி டுக், முதல் படத்தை இயக்குவதற்காகத் தன் இன்னொரு கதையை விற்ற குவெண்டின் டாரண்டினோ, ‘நல்ல படம் எடுக்க முயல்கிறேன்’ என்று தன் 85 வயதில் சொல்லும் வூடி ஆலன் உள்ளிட்ட பத்து அயல்நாட்டு சினிமா ஆளுமைகள் வெவ்வேறு இதழ்களுக்கு வழங்கிய நேர்காணல்களின் மொழிபெயர்ப்பு.
இருளில் ததும்பும் போராளி
தமிழில்: ஜெகநாத் நடராஜன்
வெளியீடு - புலம், சென்னை - 600 092
விலை: ரூ.100
தொடர்புக்கு: 98406 03499