நூல் வெளி: வாசகர்களுடன் ஒரு புனைவு விளையாட்டு

நூல் வெளி: வாசகர்களுடன் ஒரு புனைவு விளையாட்டு
Updated on
2 min read

தூயனின் முதல் தொகுப்பான ‘இருமுனை’ பரீட்சார்த்தமான சிறுகதைகள் அடங்கியது. 5 ஆண்டுகள் இடைவெளி விட்டு வெளியான ‘கதீட்ரல்’ என்ற நாவல், தொன்மத்தையும் நிகழ்காலத்தையும் ஃபான்டஸியின் கூறுகள் இணைத்து எழுதப்பட்டது. மூன்றாவதாக வெளிவரும் இந்த நூல், மூன்று சிறுகதைகளையும் மூன்று குறுநாவல்களையும் கொண்டது.

தலைப்புக் கதை, தெரிவதும் பின் மறைவதுமான ஒரு விளையாட்டு. அல்லது கதையில் சொல்வதுபோல் வாழ்க்கையில் தற்செயல்கள் எல்லாமே மேஜிக்தான். ஒரு பெரிய எலி மனதில் பயத்தையும் வீட்டில் தொந்தரவையும் தூக்கமின்மையையும் ஏற்படுத்தும் கதையில், பேராசிரியருடன் நியூட்டன், ஃப்ராய்டு, டார்வின் எல்லோரையும் இணைத்து, நனவிலி, கூட்டு நனவிலி போன்ற கருத்தாக்கங்களுடன் நீண்ட விவாதம் நடக்கிறது. எட்டு வயதுப் பெண் யோசனை சொல்கிறாள். அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்புடன் சற்றே மாயையின் சாயலும் கலந்து எழுதப்பட்ட கதை.

தூயனின் கதைகளில் சொல்லப்படும் நுண்தகவல்கள் மெல்லமெல்ல விரிவடைந்து, கடைசியில் அகண்ட சித்திரத்தை வரைகின்றன. பல கிளைக் கதைகள் இடையில் வந்து பின் விலகும்போதும் சிறுகதை வடிவம் சிதையாமல் இருப்பது கடினம். ஆனால், ஒவ்வொரு கதையிலுமே தூயன் அதைச் செய்கிறார். ஓவியன் குறித்த கதை, சக ஓவியனைக் குறித்துப் பேசிச் சட்டென்று தொன்மத்துக்குத் தாவுகிறது. கனவின் சாயலில் கதை முழுதும் நிகழ்வதும், வாழும் நிஜ ஓவியர்கள் பலரது பெயர்கள் இடைவருவதும் வாசகர்களுக்கு அரை மயக்க நிலையை ஏற்படுத்துகிறது.

உடலுறவு மீமிகைக் கற்பனைகள் தமிழில் அதிகம் வந்ததில்லை. ‘லாஸ்யம்’ கதை முழுக்கவே பாலியல் ஃபான்டஸி குறித்த கதை. ஆணின் பாலியல் கற்பனைகளுக்கும் பெண்ணுடையதற்கும் பெரிய வித்தியாசமிருக்கிறது. ஒரு ஆண், பெண்ணை முழுமையாகப் புரிந்துகொள்வதென்பது பெண் குழந்தை பெற்று, வளர்வதைப் பார்க்கும்போதுதான் இயலும் என்று சொல்வதில் உண்மை இருப்பதாகத் தோன்றுகிறது.

மாறுபட்ட கதைக் களங்களைக் கொண்ட தொகுப்பு இது. எலி குறித்த எண்ணப் பீடிப்பு பற்றிய கதை, ஓவியத்தைப் பின்னணியாகக் கொண்ட கதை, உடலுறவு ஃபான்டஸி பற்றிய கதை, ஜோசியத்தை மையமாகக் கொண்ட கதை, கரோனா நோயில் நெருங்கிய உறவினர் மரணித்தால், உடலைப் பாராமலேயே இறந்ததாகத் தீர்மானம் செய்யவைக்கும் சூழல் குறித்த கதை, காலனிய காலத்து வரலாற்றை மையமாகக் கொண்ட கதை என்று கதைகள் சித்தரிக்கப்படும் களங்கள் வித்தியாசமானவை.

‘இந்திரஜாலம்’ முழுக்கவே ஜெயமோகன் பாணிக் கதை. எனில், இதன் மொழிநடை, சொல்லப்பட்ட விதம் முற்றிலும் வேறு. வைஸ்ராய் லிட்டன் குறித்த குறுநாவல் ஏறக்குறைய அல்புனைவை ஒட்டி வரும் புனைகதை. அங்கங்கே பா.வெங்கடேசனின் பாணி தெரிகிறது. மீதிக் கதைகள் எல்லாமே அக்மார்க் தூயன் கதைகள். வைஸ்ராய் லிட்டன் பற்றிய குறுநாவலுக்காக இவர் வாசித்த நூல்கள் குறித்த பட்டியலைப் பின்னால் இணைத்திருக்கிறார். இந்தக் கதையில் மட்டுமல்ல, தொகுப்பின் எல்லாக் கதைகளிலும் தூயனின் உழைப்பு தெளிவாகத் தெரிகிறது.

தூயன் வழக்கம்போலவே, கதைகளில் பொதுவான புழக்கத்தில் இல்லாத வார்த்தைகள் சிலவற்றை உபயோகித்திருக்கிறார். தூயனின் மொழிநடை நேர்த்தியானது, நுணுக்கமான புறச் சித்தரிப்புகள், கதாபாத்திரங்களின் மனஅவசங்களுடன் ஏதோ ஒரு கோட்டில் வந்து இணைகின்றன. ஓவியம், சிற்பம் குறித்த தகவல்கள், தொன்மம், மாயையின் கூறுகள் தூயனின் எல்லாப் படைப்புகளிலும் அடிக்கடி வரும் விஷயங்கள்.

தொன்மம் குறித்து எழுதப்பட்ட கதைகளிலும், ஒரு உலகத்தன்மை இருக்கிறது. உதாரணத்திற்கு ‘லாஸ்யம்’ கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் தமிழர்களாலேயே அதன் மூலம் தமிழில் எழுதப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க முடியாத அளவு, ஒரு பெண்ணின் அகச் சிக்கல்கள் நிறைந்த கதை. உலகின் எந்த மூலையில் இருப்பவரும் அந்த உணர்வைப் புரிந்துகொள்ள முடியும்.

தூயனின் கதைகள் வாசகர்களுடன் ஒரு விளையாட்டை நடத்திக்கொண்டே இருக்கின்றன. விளையாட்டை விரும்பும் வாசகர் கதையில் தானும் பங்கெடுத்துக்கொள்கிறார். ஒரு பிரச்சினையின் தோற்றம், வளர்ச்சி, தீர்வு என்பதான சிறுகதை வடிவம் தூயனிடம் இல்லை. அதனால், ஆரம்பநிலை வாசகர்கள் தடுமாறுவதற்கு ஏராளமான சாத்தியங்கள் இருக்கின்றன. சிறுகதை வடிவத்தை அதன் பாரம்பரியத்தன்மையிலிருந்து விடுதலை செய்து, உலக மைய நீரோட்டத்தில் கலக்க வைக்கும் எத்தனங்களைச் செய்யும் வெகுசில இளம் எழுத்தாளர்களில் தூயனும் ஒருவர்.

- சரவணன் மாணிக்கவாசகம், தொடர்புக்கு: sarakavivar@gmail.com

டார்வினின் வால்

தூயன்

வெளியீடு: எதிர் வெளியீடு, பொள்ளாச்சி - 642002

விலை: ரூ.250

தொடர்புக்கு: 99425 11302

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in