நூல் வெளி: இந்தியச் சாயலுடன் ஒரு ஆப்பிரிக்க மாதா!

நூல் வெளி: இந்தியச் சாயலுடன் ஒரு ஆப்பிரிக்க மாதா!
Updated on
3 min read

ட்டி.டி.ராமகிருஷ்ணன் மலையாளத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். ‘சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி’ என்னும் நூல் மூலம் தமிழ்நாட்டில் பரவலாக அறியப்பட்டிருப்பவர். இலங்கையின் ராஜினி ராஜசிங்கத்தின் கொலையைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் அது. ‘மாதா ஆப்பிரிக்கா’ நாவலின் களம் ஆப்பிரிக்கக் கண்டம். ஆப்பிரிக்காவில் ரயில்வே கட்டுமானப் பணிகளுக்காக ஆங்கிலேயர்களால் கூட்டிச்செல்லப்பட்டு, அங்கேயே தங்கிவிட்ட குடும்பத்தின் மூன்றாம் தலைமுறைப் பெண்ணாகிய தாரா விஸ்வநாத்தின் கதை இது. மனித இனத்தின் மாறாத களங்கங்களுள் ஒன்றான உகாண்டா தினங்கள் குறித்த வரலாறும்கூட.

தாராவுடன் பேனா நண்பராக இருந்த, மனதுக்குள் அவளைக் காதலித்த மலையாள எழுத்தாளர், தாராவின் மறைவுக்குப் பின் அவளது மகள் ஸோபியாவைச் சந்திப்பதும், மலையாளம் வாசிக்கத் தெரியாத அவள், அம்மாவின் கையெழுத்துப் பிரதிகளை இவரிடம் அளித்து, மலையாளத்தில் பிரசுரிக்க உதவியை நாடுவதும், நேர்காணல், கவிதைகள், ‘மாதா ஆப்பிரிக்கா’ என்ற குறுநாவல், ‘எழுத்தாணி’ என்ற சிறுகதை, ஒகாபியின் கதை, ‘கறுப்பிற்கும் வெளுப்புக்குமிடையே’ என்ற தன்வரலாற்றின் இரண்டாம் பாகம் எல்லாம் உள்ள அந்தக் கையெழுத்துப் பிரதிகளை நாவல் வடிவில் கட்டமைப்பதுபோல அமைந்த நூல் இது.

தாரா கற்பனைப் பாத்திரம். ஆனால் இடிஅமீன், சாரா கொலாபா, கிஸங்கானியைச் சேர்ந்த லுமும்பா, மொபுடு போன்றவர்கள் உண்மையில் வாழ்ந்தவர்கள். கதை மொத்தமுமே ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது. பல வரலாற்று நிகழ்வுகள், இடங்கள், ஒவ்வொரு சமூகத்தினரின் வித்தியாசமான பழக்கவழக்கங்கள், ஆணாதிக்கம் நிறைந்த ஆப்பிரிக்கச் சமூகம், வெள்ளையர்களைப் போலவே கறுப்பினத்து ஆட்சியாளர்களும் கொடூரமாக நடந்துகொள்வது என்று 600 பக்கங்களும் மேல் வரும் ஏராளமான விஷயங்களைக் கொண்டு, மலையாளத்தில் ஒரு ஆப்பிரிக்க நாவலை எழுதுவது, கற்பனையால் மட்டும் என்பது சாத்தியமேயில்லை. ஆப்பிரிக்க இலக்கிய அரசியலையும் நாவல் தொட்டுச் செல்கிறது.

மாதா ஆப்பிரிக்கா யார்? தாராவைப் பொறுத்தவரை அவளைக் காக்கும் தெய்வம். இந்திய நம்பிக்கைகளும் ஆப்பிரிக்க சாயலும் கொண்ட அன்னை. ஆனால், உண்மையில் அவள் ஒரு கற்பனை வடிவம். தாராவின் மனத்தோன்றல். மாதா, தாராவின் மற்றொரு நான். துன்பம் வரும் நேரத்தில் எல்லாம் மாதா அருள்பாலிப்பதாக எண்ணிக்கொண்டே தன்னைத் தற்காத்துக்கொள்கிறாள் தாரா. தீயவழிகளுக்குள், அதிகார போதைக்குள் தாரா சிக்கிக்கொள்ளாமல் அவளைத் தடுத்தாட்கொள்கிறாள் மாதா. மாதா, தாராவின் நம்பிக்கை. தான் சிறுமியாக இருந்தபோது ஓவியத்தின் மூலம் மாதாவை முதன்முதலில் வடிவமைத்தது தாராவே.

தாராவின் உடலில் புரட்சி ரத்தத்தின் ஜீன்கள் ஏராளமாகக் கலந்திருக்கும். அவளுடைய தாத்தா சுதந்திரம் வேண்டும் ‘உஹுரு’ என்ற சங்கத்தை ஆப்பிரிக்காவில் தோற்றுவித்தவர். அவரது தந்தை வன்முறை ஆதிக்கத்தை எதிர்த்து ரகசியக் கடிதங்களை எழுதியவர். தாராவிடம் போராட்டக் குணம் இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், அவளிடம் சமயோசித புத்தியும் இருந்தது. இடிஅமீன் பலவந்தமாகக் கடத்திச் சென்று தன்னுடன் வைத்துக்கொண்டபோது, அவருக்கு இணங்காமல் இருந்திருந்தால் அப்போதே உயிர் போயிருக்கும்.

இனத் தலைவன் செய்த கொடூரமான சடங்குகளை எதிர்த்திருந்தால், எல்லையைத் தாண்டுவதற்குப் பட்டாளத்தானின் ஆசைக்கு இணங்காதிருந்திருந்தால், தகப்பன்போல் நினைத்த ஒருவனின் ஆசைக்கு அடிபணிய மாட்டேன் என்று போராடியிருந்தால்... என்பதுபோல் ஏராளமான சந்தர்ப்பங்களில் அவள் வெள்ளத்தின் வேகத்துக்கு எதிர்நீச்சல் செய்யாதது காப்பாற்றியிருக்கிறது. ஆனால், அமைதியான சூழலில் அவள் ராமுவை மறந்து, இவானைத் தேர்ந்தெடுத்தது முக்கியமான முடிவு. தாராவை யாரும் சந்தர்ப்பவாதி என்று எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால், அவர்கள் தாரா கடந்து வந்த பாதையின் வெம்மையைக் கற்பனையிலும் அறியாதவர்கள்.

ராமகிருஷ்ணனின் நான்காவது நாவல் இது. சரித்திர நிகழ்வை மையமாக வைத்துப் புனைவை எழுதுகையில், கற்பனைப் பாத்திரங்களை நிஜ மாந்தருடன் உரையாட வைப்பது என்பதையும் தாண்டி, இவர் கதாபாத்திரங்களின் கற்பனாம்சத்தை நாவலில் கலக்கிறார். தாரா கற்பனையல்ல என்று வாசகர் மனதில் ஒரு எண்ணத்தை உருவாக்குவதற்கான எல்லாத் தரவுகளையும் இவர் உருவாக்கும் நேரத்தில், புராணக் கதைகளில் வரும் நிகழ்வுகளும் தேவதைகளும், அசுரர்களும் இடையே வந்து வாசிப்பவர்கள் உண்மை-கற்பனை என்னும் இரு குதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரி செய்யும் உணர்வை அடைகிறார்கள்.

ஆப்பிரிக்காவின் பழக்கவழக்கங்கள், ஆணாதிக்கம், நிறவெறி, ராமாயணம், மலையாளம் மற்றும் ஆப்பிரிக்க எழுத்தாளர்களின் இலக்கியம், இடதுசாரிக் கொள்கைகள் என்று பல மடிப்புகளை உள்ளடக்கியது இந்த நாவல். ராமகிருஷ்ணன் தனது 42-வது வயது வரை எழுதவில்லை என்பது ஆச்சரியம். குறிஞ்சிவேலன் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியப் பணியில் இருப்பவர். அவரது முக்கியமான மொழிபெயர்ப்புப் பங்களிப்புகளுள் இந்த நூலும் ஒன்று. நல்ல நாவல்கள் என்பவை ஒரு பயணம் செல்வதைப் போன்றவை. அறியாத இடங்கள், அறிமுகமில்லாத மனிதர்கள் எல்லாம் நமக்கு மிகவும் பரிச்சயமாவது இது போன்ற பயணங்களில்தான்.

- சரவணன் மாணிக்கவாசகம், இலக்கிய விமர்சகர். தொடர்புக்கு: sarakavivar@gmail.com

மாதா ஆப்பிரிக்கா

ட்டி.டி.ராமகிருஷ்ணன்

மலையாளத்திலிருந்து தமிழில்: குறிஞ்சிவேலன்

அகநி வெளியீடு, வந்தவாசி

விலை: ரூ.650, தொடர்புக்கு: 98426 37637

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in