Last Updated : 07 Jun, 2014 10:11 AM

 

Published : 07 Jun 2014 10:11 AM
Last Updated : 07 Jun 2014 10:11 AM

எப்படி எழுதுகிறார்கள்?

எண்பதுகளின் தொடக்கத்தில் இலக்கியக் கோட்டி பிடித்து எழுத்தாளராவதைத் தவிர வேறு மார்க்கமேயில்லை என்று நாங்கள் (நான், நாறும்பூநாதன், சாரதி, திடவைபொன்னுச்சாமி, அப்பணசாமி) கோவில்பட்டியில் உள்ள காந்தி மைதானத்தின் பொட்டல் வெயிலில் சத்தியம் செய்திருந்தோம்.

புத்தகங்களைத் தின்று தீர்த்தோம். அதுவரை தெரிந்த உலகமே இப்போது வேறொன்றாய்த் தெரிந்தது. உலக, இந்திய, தமிழ், எழுத்தாளர்களோடு ஏற்பட்ட பரிச்சயம் எங்கள் நடையையே மாற்றிவிட்டது. தரையில் கால் பாவியதாக நினைவில்லை. நாங்கள் வேறு பிறவிகள் என்ற நினைப்பு.

பாரதி, புதுமைப்பித்தன், மௌனி, கு. அழகிரிசாமி, கு.ப.ரா., சுந்தர ராமசாமி, கு. சின்னப்ப பாரதி, டி. செல்வராஜ், கி. ராஜநாராயணன், வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி என்று வாசித்துத் தீரவில்லை. வாசிக்கும்போதும் வாசித்து முடித்த பிறகும் எங்களுக்குத் தோன்றும் முதல் கேள்வி “எப்டிரா எழுதறாங்க..?” என்பதுதான். எழுத்தாளர்களை அதிசயப் பிறவிகளாக எண்ணி மணிக்கணக்காக அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம்.

எழுத்தாளர்களைச் சந்திக்க நேர்ந்தால் கண்களில் பக்தியுணர்வு தோன்றிவிடும். அவர்களுடைய நடையுடை பாவனைகளை, அவர்கள் பேசும் முறையை, அவர்கள் சிரிப்பதை, அவர்கள் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையையும் மிக உன்னிப்பாகக் கவனிப்போம். அவர்களுடன் இருக்கும் நேரம் முழுவதும் ஒரு பணிவு எங்களிடம் இருக்கும்.

எல்லா எழுத்தாளர்களிடமும் தவறாமல் கேட்கிற கேள்வி “நீங்க எப்ப சார் எழுதுவீங்க?” அவர்கள் சொல்கிற பதிலில்தான் எங்கள் எதிர்கால எழுத்துலகமே இருப்பதைப் போல அவர்கள் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்போம். மாக்சிம் கார்க்கியின் ‘எப்படி எழுதுவது?’ அலெக்ஸி டால்ஸ்டாயின் ‘எழுதும் கலை’ என்று எழுதுவதைப் பற்றிய வியாக்கியானங்களை வேறு படித்திருந்தோம்.

நாங்கள் சந்தித்த எழுத்தாளர்களையும் அந்தச் சந்தேகங்களின் கொடுக்குகளால் கொட்டிக்கொண்டிருந்தோம். அவர்கள் என்ன சொன்னாலும் எங்களுக்குத் திருப்தியில்லை. எதையோ மறைக்கிறார்கள் என்று பின்னர் பேசிக்கொண்டிருப்போம். ஏனெனில் நாங்கள் அப்போது வேலையின்றிச் சுற்றிக்கொண்டிருந்ததால் எப்போது வேண்டுமானாலும் எழுதிப்பார்க்கும் சுதந்திரம் இருந்தது. ஆனால் எழுதினால் எழுத்துதான் வரவில்லை. அதனால்தான் எழுத்தாளர்களின் நடவடிக்கைகளை உற்றுக் கவனித்து ரகசியத்தைக் கண்டுபிடிக்க முயன்றோம்.

இடைசெவல் போய் கி.ரா.வைப் பார்த்தால் அப்படி ஒரு ஒழுங்கு. சுத்தம். நறுவிசு. குடிக்கிற செய்யது பீடியைக்கூடத் தேர்வு செய்து, அதன் முனையை, அருகிலேயே வைத்திருக்கும் கத்தரிக்கோலை வைத்துக் கத்தரித்துப் பற்றவைப்பார். அவருடைய நடையுடை பாவனைகளில் இருக்கும் நேர்த்தி யாரையும் கவர்ந்துவிடும். பூமணியிடம் பேசிக்கொண்டிருந்தால் தினமும் அதிகாலை எழுந்து எழுதுவேன் என்று சொல்லுவார்.

சுந்தர ராமசாமி டைப்ரைட்டரில் தான் கதை எழுதுவார் என்று கேள்விப்பட்டிருந்தோம். கலை எழுச்சி வர வேண்டும். அருள் வந்த மாதிரி, காய்ச்சல் வந்த மாதிரி உடம்பு சூடு ஏற வேண்டும். கைகளில் ஒரு நடுக்கம். இனி எழுதாமலிருக்க முடியாது என்கிற மாதிரி ஒரு வெறி. இடம், பொருள், காலம் பற்றிய பிரக்ஞை (அப்போது இந்த வார்த்தையைப் பயன்படுத்தாத இலக்கிய உரையாடல்களே கிடையாது) இருக்கக் கூடாது. இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருப்போம். என்ன வேப்பிலையடிச்சாலும் எங்களுக்கு அருள் வரவில்லை.

ஆனாலும் விடுவோமா? ஒவ்வொருவரும் தினசரி ஒரு கதை எழுதிக் கொண்டுவர வேண்டும் என்று எங்கள் சபையில் முடிவு செய்தோம். ஒரு பக்கமாக இருந்தாலும் சரி. எழுத வேண்டும். எப்படியாவது கலாமோகினியின் கடைக் கண் பார்வையை எங்கள் பக்கம் திருப்பிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டோம். கலை எழுச்சி அல்லது கலை அருள் வருவதற்கு வேறு வெளி உபகரணங்களைப் பயன்படுத்தவும் யோசித்தோம். நிறைய டீ குடித்தோம். பீடி பிடித்துப் பார்த்தோம்.

காசு இருந்தால் அல்லது ஓசியென்றால் வில்ஸ் ஃபில்டர் வாங்கிக் குடித்தோம். பாரதி கஞ்சா அடித்துவிட்டுத்தான் கவிதை எழுதுவானாமே என்று ஒரு நண்பர் சொல்ல எப்படியோ கஷ்டப்பட்டு கஞ்சாவைச் சம்பாதித்து அதை சிகரெட்டிலோ பீடியிலோ அடைக்கத் தெரியாததால் சூடான டீயில் கலந்து குடித்துப் பார்த்தோம். சிரிசிரியென்று சிரித்து உருண்டதும், நடை நடையென்று ஒரே தெருவில் நடந்துகொண்டேயிருந்ததும் தான் மிச்சம். கலாமோகினி எங்கே போனாள் என்றே தெரியவில்லை.

தினமும் எழுதிக் கொண்டுவர வேண்டும் என்ற எங்கள் முடிவு ஒரு வாரத்தில் காலமாகிவிட்டது. சிலசமயம் வண்ண தாசனின் ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ சிறுகதைத் தொகுப்பைப் படித்துவிட்டு அதன் அதிர்வுகளிலிருந்து மீளுமுன்னே கதை எழுதிப் பார்ப்பதுண்டு. அப்படியே வண்ணதாசன் கதை மாதிரியே இருக்கும்.

பல சமயம் எழுதிக் கையெழுத்துப் பிரதியாக நண்பர்களிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லி அவர்கள் படித்து முடிக்கும்வரை இருக்கும் பாருங்க ஒரு அமைதி. ஆளையே காலி பண்ணிவிடும். படித்து முடித்ததும் நண்பர் மேலும் கீழும் ஒரு பார்வை பார்ப்பார். பின்னர் திரும்ப ஒரு தடவை எழுதிய தாள்களைப் புரட்டுவார். லேசாகத் தொண்டையைச் செருமிக்கொள்வார். அவர் வாயையே பார்த்துக்கொண்டிருக்கும்போது பொன்னம்போல மெல்ல உதடுகளை அசைப்பார்.

“ஒரு டீ சொல்லேன். அப்படியே ஒரு வில்ஸ் ஃபில்டரும் வாங்கிரு..” என்ற வார்த்தைகளைச் சிந்தி அடக்குவார். எல்லாம் நேரம்டா நேரம் என்று மனசுக்குள் கறுவிக்கொண்டே அவர் கேட்டதை வாங்கிக் கொடுத்த பிறகும் நீண்ட புகைமேகங்களை அனுப்பிக்கொண்டே ஏராளமான வெளிநாட்டு உள்நாட்டு, தமிழ்நாட்டு, உள்ளூர் எழுத்தாளர்களின் கதைகளைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையெல்லாம் வாசிப்பார். அதில் இல்லாதது பொல்லாததும் இருக்கும். பல்லைக் கடித்துக்கொண்டு அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். அப்படியே ஒரு இரண்டு மணிநேரம் கழியும். இனி பொறுக்க முடியாது தற்கொலைதான் வழி.

விழும்போது அவரையும் சேர்த்துத் தள்ளிர வேண்டியதான் என்ற முடிவின் வாசல் கதவைத் திறக்கும்போது “உன்னோட இந்தக் கதை..” என்று ஆரம்பித்து உலகச் சிறுகதைகளை ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்து சுற்றி வளைப்பார். கடைசியில் “கதை சரியில்லை” என்பதைத்தான் அவ்வளவு நேரமாகச் சொல்லியிருப்பார்.

எப்படியிருக்கும்? ஏதோ இந்த ஒரு கதையிலதான் என்னோட உயிரே இருக்கிற மாதிரி துடிக்கிற துடிப்பு கடைசியில் அடங்கிவிடும். முகம் தொங்கிப்போக, சரிதான் நமக்கு எழுத வராதுபோல என்ற எண்ணம் தோன்றிவிடும். இது வரை நான் எழுதிக் கையெழுத்துப் பிரதியில் படிக்கக் கொடுத்த கதைகளில் ஒரு கதையைக்கூட நல்லாருக்குன்னு ஒருத்தர்கூடச் சொன்னதில்லை.

எழுத்தாளர்களுக்கு உள்ளுக்குள் ஒரு பொறாமை நதி ஓடிக்கொண்டிருக்கும் போல. மற்றவர்கள் பிரதிகளைப் படிக்கும்போது அந்த நதியில் முங்கி முங்கி எழுவார்கள்போல. ஆனால் இப்படிப் பொத்தாம் பொதுவாய்ச் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. பல சமயம் இந்த மாதிரி விமர்சனங்கள் நம்மைப் புடம் போடவும் செய்யும். நம்மைச் செப்பனிட, செழுமைப்படுத்த, இன்னும் தீவிரமாய் எழுதத் தூண்டும்.

இப்பவும் அந்தக் கேள்வி இருக்கத்தான் செய்கிறது. அதுவும் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் முக்கியமான எழுத்தாளர்களான வண்ணதாசன், கோணங்கி, ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், ஜாகீர்ராஜா, இன்னும் பலரிடமும் இப்பவும் கேட்க நினைக்கிற கேள்வி இதுதான். “எப்படி எழுதுறீங்க?”.

அருள் வந்தோ, கலாமோகினியின் கடைக்கண் பார்வை பட்டோ, தியானம் செய்தோ, பிரக்ஞை விழிப்பு நிலையினாலோ, பிறவித் திறமையாலோ, கடின உழைப்பாலோ, கடுமையான முயற்சியாலோ, தீவிரப் பயிற்சியாலோ எப்படியோ எழுத்தாளராகிவிட வேண்டும் என்று நாங்கள் செய்த, யோசித்த, மேற்சொன்ன விஷயங்களால் நான் அல்லது நாங்கள் எழுத்தாளராகவில்லை, அது வேறு விஷயம். ஆனால் அந்த வேறு விஷயம்தான் என்னவென்று தெரியவில்லை.

- உதயசங்கர், எழுத்தாளர்
தொடர்புக்கு: udhayasankar.k62@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x