நூல்நோக்கு: புத்தக மனிதருக்கு முத்துவிழா

நூல்நோக்கு: புத்தக மனிதருக்கு முத்துவிழா
Updated on
1 min read

அகவை எண்பதில் அடியெடுத்து வைத்திருக்கும் கோவை ‘விஜயா’ மு.வேலாயுதம் தமிழ்ப் பதிப்புலகத்துக்கு ஆற்றிவரும் பணிகளைப் போற்றும்வகையில், 400 பக்க அளவில் முத்துவிழா மலர் ஒன்றை அவரது இலக்கிய நண்பர்கள் வெளியிட்டுள்ளனர். நாஞ்சில்நாடன், செல்ல கணபதி, பெ.சிதம்பரநாதன், கா.சு.வேலாயுதன், சுப.திருஞானம், ரெங்கலெ.வள்ளியப்பன் ஆகியோரை உள்ளடக்கிய இந்த மலர்க் குழு, மு.வேலாயுதத்தின் 45 ஆண்டு காலப் பதிப்புப் பயணத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. உயர் நீதிமன்ற நீதிபதி, அரசியல் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோருடன் எழுத்தாளர்கள், பதிப்பாளர்களும் மு.வேலாயுதத்துடனான தங்களது நட்பைப் பற்றிக் கட்டுரைகளாகவும் கடிதங்களாகவும் பகிர்ந்துகொண்டுள்ளனர். அவர்கள் அத்தனை பேரையும் இணைக்கும் மையப்புள்ளியாக வாசிப்பே இருக்கிறது. பாரதி நடத்திய பத்திரிகையின் பெயரால் தொடங்கப்பட்ட பதிப்பகம், இன்று கோவையின் முதன்மையான இலக்கிய அடையாளங்களில் ஒன்றாக வளர்ந்துநிற்கிறது. அது, நம் சமகாலத் தமிழ் இலக்கிய உலகத்தின் அடையாளங்களுள் ஒன்றும்கூட. ‘விஜயா’ மு.வேலாயுதம் பல்லாண்டு வாழ்க!

புத்தக மனிதர் மு.வேலாயுதம்
முத்துவிழா மலர்
முத்துவிழா மலர்க் குழு,
ஆர்.எஸ்.புரம், கோயம்புத்தூர்-641002.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in