Published : 04 Jun 2014 12:00 AM
Last Updated : 04 Jun 2014 12:00 AM

முன்னோடிப் பெண்களின் வரலாறு

பெண் இனத்தின் வரலாறு வெளிப்படும் போதுதான், பெண்மீதான இன்றைய மதிப்பீடு மாறும்.

இதன் ஒரு முயற்சியாகப் பேராசிரியை சோ.மோகனா எழுதிய ‘முதல் பெண்’ என்ற நூல், முதல் பெண் அறிவியலாளர், கணிதவியலாளர், விண்வெளி விஞ்ஞானி, அறுவை சிகிச்சை மருத்துவர், இலக்கியவாதி, விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆகி யோரை உலகிற்கு அடையாளம் காட்டுகிறது.

அகழ்வாய்வின் மூலமாகக் கிரேக்கத்திலும், எகிப்திலும், சைப்ரஸ் தீவிலும் கண்டறியப்பட்ட தொல் பொருட் களை ஆதாரமாகக் கொண்டு இந்த நூலை எழுதியுள்ளார். பித்தாகரசின் தேற்றத்தை, அவரது மறைவிற்குப் பிறகு வெளியுலகிற்குப் பாதுகாத்துக் கொடுத்த தியானோ, 4000 ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் நறுமணத் திரவம் தயாரித்த தப்புட்டி பெலாட்டிகல்லிம், 4300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சுமேரிய இலக்கியங்களின் ஷேக்ஸ்பியர் என்று பாராட்டப்படும் என்ஹெடுன்னா ஆகியோரைப் பற்றிய தகவல்கள் தற்காலப் பெண்களுக்கு உற்சாகம் அளிப்பவை.

கி.பி.350-ல் அலெக்சாண் டரியாவில் பிறந்து, கடவுளை மறுத்ததற்காக உயிருடன் தோல் உரிக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட முதல் பெண் விஞ்ஞானி ஹைப்பேஷியா, கி.பி.1322-ல் மனித உடலின் ரத்தக் குழாய்களை முதலில் கண்டறிந்த அலெக்சாண்டிரா கிலியானி, 1988-ல் விண்வெளியில் பறந்த முதல் கறுப்பினப் பெண் மா கரோல் ஜெமிசன் போன்ற முதல் பெண்களின் வியப்பளிக்கும் வாழ்க்கைப் பயணங்கள் இந்நூலில் பதிவாகியுள்ளன.

இந்த வரிசையில் சிவகங்கை வீரப்பெண்மணி வேலு நாச்சியார், முதல் பெண் விடுதலைப் போராட்ட வீரர் என்றும் நூலின் ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஜான்சி ராணிக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னரே வேலு நாச்சியார் ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டதாகக் கூறுகிறார்.

அறிவியல் பேராசிரியரான சோ.மோகனா, பெண்களுக்கு ஏற்றத்தல்ல என்று ஒதுக்கப்பட்ட அறிவியல் துறைகளிலும் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே பெண்கள் இருந்துள்ளனர் என்பதைத் தனது நூலின் மூலம் உலகிற்கு வெளிப்படுத்தி உள்ளார். இந்திய, தமிழக வரலாற்றில் இருந்த பெண் அறிவியலாளர் பற்றியும் ஆய்ந்து பதிவுசெய்திருந்தால் நூல் முழுமை பெற்றிருக்கும். உலக அறிவியல் பெண் சாதனையாளர்களைப் பற்றிய இந்நூலில் இந்திய பெண் அறிவியல் சாதனையாளர்கள் விடுபட்டுபோனது துரதிர்ஷ்டவசமானது. நூலில் சில இடங்களில் விளக்கப் படங்கள் தெளிவாகவும் பெயரிடப்பட்டும் இருந்திருந்தால் மாணவர்களுக்கு இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x