Last Updated : 12 Mar, 2022 12:09 PM

 

Published : 12 Mar 2022 12:09 PM
Last Updated : 12 Mar 2022 12:09 PM

நூல் வெளி | நூல்நோக்கு: வழிநடத்தும் வார்த்தைகள்

ஏணி, தோணி ஆகியவற்றுடன் ஆசிரியர்களை ஒப்பிடுவது உண்டு. முன்னவை இரண்டும் திரும்பி வருவதற்காகக் காத்திருக்கும். ஆசிரியர்களோ அவர்களது வார்த்தைகளால் கூடவே பயணிக்கிறார்கள், வாழ்வையும் வழிநடத்துகிறார்கள். அப்துல் ரகுமானுக்குள் கவிதையின் ஊற்றுக்கண்ணைத் திறந்துவைத்தவர் அவரது பள்ளித் தமிழாசிரியர் ராமகிருட்டிணன்; வைரமுத்துவுக்கு அவரது பள்ளித் தமிழாசிரியர் உத்தமன்.

ட்ராட்ஸ்கி மருதுவின் ஓவிய வாழ்க்கைக்கு அடித்தளமிட்டவர், அவரது பள்ளி ஓவிய ஆசிரியர் அகஸ்டின். இப்படி அசோகமித்திரன், வண்ணதாசன், நாஞ்சில்நாடன் உள்ளிட்ட எழுத்தாளர்களும் பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன், சுப.உதயகுமாரன், கே.பாலபாரதி உள்ளிட்ட அரசியல் செயல்பாட்டாளர்களும் டி.எம்.கிருஷ்ணா, வீணை காயத்ரி ஆகிய இசையாளுமைகளும் ஆட்சி நிர்வாகத்துடன் எழுத்துலகிலும் முத்திரை பதித்த ஆர்.பாலகிருஷ்ணன், வெ.இறையன்பு ஆகியோரும் இன்னும் பிரபல இயக்குநர்கள், பாடலாசிரியர்கள் என்று முப்பதுக்கும் மேற்பட்டவர்களின் பள்ளிப் பிராய நினைவுகளை உள்ளடக்கியது இத்தொகுப்பு. பள்ளிக்கூடங்கள் என்பவை வெறும் கட்டிடங்களும் பாடத்திட்டங்களும் மட்டுமில்லை, ஆசிரியர்களாலேயே அவை உயிர்ப்படைகின்றன. மாணவப் பருவம் பள்ளியிலிருந்து மட்டுமின்றி, பள்ளிக்கு வெளியிலும் இவ்வுலகைக் கற்றுக்கொள்ள முயல்கிறது என்பதற்கான பதிவுகளாகவும் இவை இருக்கின்றன. பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் தவறவிடக்கூடாத புத்தகம் இது. ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கையிலும் தான் வகிக்கப்போகும் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்வதற்கான ஒரு வாய்ப்பும்கூட.

- புவி

உள்ளேன் அய்யா
பிரபலங்களின் பள்ளி நினைவுகள்
சுந்தரபுத்தன்
பரிதி பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு:
72006 93200

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x