Published : 25 Dec 2021 12:32 PM
Last Updated : 25 Dec 2021 12:32 PM

130 புத்தகங்கள் எழுதிய ஜேக்கப் வாத்தியார்!

எழுத்தாளர் ஜேக்கப் வாத்தியாரைப் பார்க்கப் போயிருந்தேன். கால்களில் எதோ ஒரு எண்ணெயைத் தேய்த்துக்கொண்டிருந்தார். கால்களில் உள்ள தழும்புகள் அவர் கூறியிருந்த கதைகளை நினைவுபடுத்தின.

‘‘என்னென்னு தெரியல… ரெண்டு நாளா காலு ரொம்ப வலிக்குது. அதான் இந்த எண்ணெயைத் தேய்ச்சுக்கிட்டு இருக்கேன்’’ என்றார்.

நெல்லைச் சதி வழக்கில் விசாரணைக் கைதியாக இவரைப் பிடித்துச் சென்றது காவல் துறை. ஐம்பதுகளில் காவல் நிலையத்தில் வைத்து உருட்டுத் தடிகளைக் கால் முட்டிகளிலும் கரண்டைக் கால்களிலும் வைத்து அதன் மேல் ஏறி நின்று சித்ரவதை செய்வார்கள்…

‘‘பாலதண்டாயுதம் எங்கே இருக்கான்… சொல்லு..?’’

‘‘எனக்குத் தெரியாது’’ என்று சொன்ன அடுத்த கணமே உயிர்போகும் அளவுக்கான சித்ரவதைகள் தொடங்கும்.

“ஜூலியஸ் பூசிக் எழுதிய நூலைப் படித்திருந்ததால், நான் யாரையும் காட்டிக்கொடுக்க விரும்பவில்லை. எனக்குத் தன்னம்பிக்கை கொடுத்த நூல் அது” என்றார் ஜேக்கப் வாத்தியார்.

மேலும், ‘‘என்னோட வீட்டிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு கூவினார். ஒரு போலீஸ்காரர், ‘‘சார்... இவங்களோட பாஸ் எழுதின புஸ்தகம் இங்க இருக்கு...’’ என்று அதை எடுத்துக் காவல் துறை ஆய்வாளரிடம் நீட்டினார். அது மாற்கு எழுதிய நூல் (விவிலியத்தில் ஒரு சுவிசேஷம்). அவர் அதை மார்க்ஸ் என்று நினைத்துக்கொண்டார்''.

‘‘ஜெயிலில் மூன்றாண்டு காலமும் தினமும் சித்ரவதைதான். 1952-ல் என்னை விடுதலை செய்தார்கள். பழையபடி பள்ளியிலும் வேலையைத் தொடர முடியாதபடி நெருக்கடிகள். எனது சர்வீஸ் ரெஜிஸ்டரில் ‘Dangerous Communist’ என்று சிவப்பு மையால் பெரிய எழுத்தில் எழுதி வைத்துவிட்டார்கள். 1952 தேர்தலில் வெற்றிபெற்ற ஜீவா, ராமமூர்த்தி, கே.டி.கே.தங்கமணி போன்றவர்கள் அன்றைய முதல்வரிடம், எனது சர்வீஸ் ரெஜிஸ்டரில் இருந்த சிவப்பு வாக்கியங்களை நீக்கச் சொல்லி முறையிட்டார்கள். அதன் பிறகே எனக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டு, இடைவெளியின்றி எனது ஆசிரியர் பணி தொடர்ந்தது.

“எனக்குத் திருமணம் ஆனபோது, எனது உடம்பைப் பரிசோதித்த டாக்டர் சொன்னார், ‘உனது கைகால்களில் தசைநார்கள் எல்லாம் கட்டிகட்டியாய்த் திரண்டுபோய்விட்டன. நீண்ட காலம் உயிரோடு இருக்க மாட்டாய். உனது மனைவியிடம் சொல்ல வேண்டாம்’ என்றார்’’.

‘‘நாதன்… சொன்ன டாக்டரும் இறந்துபோயிட்டார். எனது மனைவியும் இறந்துவிட்டாள். நான் மட்டும் இன்னும் இந்த 91 வயது வரையில் இருக்கிறேன்'' என்றார்.

‘‘கம்யூனிஸ்ட்டுகள் பட்ட சித்ரவதைகள், தியாகங்கள் எல்லாம் சொல்லி மாளாது. வேற கட்சிகள் என்றால் இவற்றைப் பெருசாகச் சொல்லி வேற மாதிரி ஆகிவிடுவார்கள். நாம் நமக்குள் மட்டுமே பேசிக்கொள்வோம்…'' என்றவர் ஒரு கணம் நிதானித்து, ‘‘கம்யூனிஸ்ட்டுகளைச் சமூகத்தில் எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாதுன்னுதான் நான் நினைக்கேன்… அது அப்படித்தான்…'' என்றார். குனிந்து மீண்டும் ஒரு குத்து எண்ணையை எடுத்து, 65 ஆண்டுகளுக்கு முன்பு லத்திக் கம்புகள் பதம்பார்த்த கால்களில் தேய்த்துக்கொண்டார்.

கடந்த நவம்பர் 19-ல் தனது 96-வது பிறந்த நாளில் உள்ளூர் மருத்துவமனையில் இருந்தார். அவரைப் பார்க்கக் கிளம்பினேன். ‘‘வீட்டுக்கு வந்துருவேன். அங்க வந்து பாருங்களேன்'' என்றார்.

ஆனால், அவர் உடலை மட்டுமே பார்க்க முடிந்தது. 130 நூல்களை எழுதிய உங்களுக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிச்சயம் ஒரு இடம் இருக்கிறது! போய்வாருங்கள் ஸார்வாள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x