

மகாபாரதத்தை இயற்றியவர், வேதங்களைத் தொகுத்து அளித்தவர் இந்து மதத்தின் 18 புராணங்களில் 17ஐ இயற்றியவர் வேதவியாசர். அவற்றில் மிகப் புனிதமானதாகக் கருதப்படுவதும் இன்றளவும் ஆன்மிகச் சான்றோர்களாலும் சொற்பொழிவாளர்களாலும் பெரிதும் மேற்கோள் காட்டப்படுவதுமான புராணம் ஸ்ரீமத் பாகவதம். வியாசர் வடமொழியில் இயற்றிய பாகவத புராணத்தை எளிய தமிழில் அனைத்து வயதினரும் புரிந்துகொள்ளும் வகையில் கதைகளாகக் கொடுத்துள்ள நூல் இது.
புராணத்தின் பத்து ஸ்கந்தங்களின் (பகுதிகள்) சாராம்சமும் 119 கதைகளாகத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. பொதுவாக அறியப்பட்ட பத்து அவதாரங்களுடன் நாரதர், தத்தாத்ரேயர், மோகினி, தன்வந்த்ரி, வேதவியாசர் ஆகியோரையும் சேர்த்து திருமாலின் அவதாரங்கள் 20-க்கும் மேற்பட்டவை என்கிறது ஸ்ரீமத் பாகவதம்.
அந்த அவதாரங்கள் ஒவ்வொன்றுக்குமான காரண காரியங்களை விளக்குகிறது இந்தப் புராணம். ஆனாலும், இதில் கிருஷ்ணரே முதன்மைப்படுத்தப்படுகிறார். முதல் ஸ்கந்தத்திலிருந்து பல இடங்களில் கிருஷ்ணர் அல்லது அவர் தொடர்பான கதைகள் வருகின்றன. இருப்பதிலேயே பெரிய பகுதியான பத்தாவது ஸ்கந்தம் கிருஷ்ணரின் பிறப்பிலிருந்து இறுதியில் வேடன் மறைவிலிருந்து எய்திய அம்பினால் மறைந்து வைகுண்டம் அடைவது வரையிலான கதைகளை உள்ளடக்கியது.
- கோபால்
வியாசர் இயற்றிய ஸ்ரீமத் பாகவதம்
அனந்தாச்சாரி
வெளியீடு - அருணா பப்ளிகேஷன்ஸ்
விலை - ரூ.230
தொடர்புக்கு - 94440 47790