Published : 28 Aug 2021 06:30 AM
Last Updated : 28 Aug 2021 06:30 AM

நூல்நோக்கு: குழந்தைகளை வளர்க்க ஒரு கையேடு

நாகா

நம் காலத்தின் குழந்தைகள்
சிவபாலன் இளங்கோவன்
உயிர்மை பதிப்பகம்
அடையாறு, சென்னை-20.
தொடர்புக்கு: 044-48586727
விலை ரூ.110

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் எல்லாக் குடும்பங்களிலும் எதிரொலித்த முதல் கேள்வி, குழந்தைகளை எப்படிச் சமாளிப்பது என்பதுதான். ஒரு மாத விடுமுறைக்கு மட்டுமே பழக்கப்பட்ட குழந்தைகள், ஓராண்டுக்கும் மேலாக வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதும் பெற்றோர்களும் அவர்களைச் சமாளிக்க முடியாமல் திண்டாடித்தான் போனார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அப்போது பெரும்பாலானோருக்குள் எழுந்த சந்தேகம்: நம் குழந்தைகளை நாம் சரியாகத்தான் வளர்க்கிறோமா? அந்த சந்தேகத்தை உணர்ந்து, அதைத் தீர்க்கும் வகையில் சில தீர்வுகளையும் முன்வைத்து `நம் காலத்தின் குழந்தைகள்' நூலை எழுதியுள்ளார் சிவபாலன் இளங்கோவன்.

தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மனநலத் துறையில் இணைப் பேரா சிரியராகப் பணிபுரிந்துவரும் இவர், குழந்தை வளர்ப்பின் சிக்கல்களை மிக ஆழமாக அலசியுள்ளார். குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் மட்டும் அக்கறை செலுத்தி, சாப்பாட்டை ஊட்டிவிடுவதில் கவனம் செலுத்தும் பெற்றோர்கள், அவர்களின் மூளை வளர்ச்சியிலும், மன வளர்ச்சியிலும், சிந்தனை வளர்ச்சியிலும் அக்கறை செலுத்துவதில்லை என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறார். நன்றாகக் குழந்தைகளை வளர்ப்பதற்கான வழிமுறைகள் நம்மிடம் இல்லை என்ற போதாமையும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.

எதேச்சாதிகாரப் பெற்றோர்கள், அதிகாரபூர்வப் பெற்றோர்கள், இலகுவான பெற்றோர்கள், அக்கறையற்ற பெற்றோர்கள் என நான்கு வகையாகப் பிரித்து, அதில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்ற சுய பரிசோதனையையும் இந்நூல் செய்யவைக்கிறது. குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்குமான உறவானது, பயத்தின் அடிப்படையில் இல்லாமல், சுதந்திர உணர்வு, பாதுகாப்பு உணர்வின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதையும் இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவது, செல்போன் செயலிகளில் மூழ்குவது, சமூக வலைதளங்களுக்கு அடிமையாவது என டிஜிட்டல் குழந்தை களுக்கு ஏற்படும் உளச் சிக்கல்கள், உடல்ரீதியான பிரச்சினைகள் குறித்தும் அக்கறையுடன் இந்த நூல் அறிவுறுத்துகிறது. 12 வயதுக்கு உட்பட்ட எந்தக் குழந்தைக்கும் செல்போன் தரக் கூடாது என்று பெற்றோர்கள் கண்டிப்புக் காட்டுவது சரியே என வலியுறுத்துகிறது.

குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்காக இல்லை என்பதையும், அருகமைப் பள்ளிகளின் அவசியத்தையும், தேர்வுப் பதற்றத்தைத் தவிர்ப்பதற்குச் செய்ய வேண்டிய யோசனை களையும், பேய்ப் படங்களால் ஏற்படும் குழந்தை களின் மனநிலையையும் உதாரணங்களுடன் விவரிக்கிறது இந்நூல். குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் செய்யும் தவறுகளைக் களைவதற்கு இந்நூல் நிச்சயம் பயன்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x