அமேசான் நாயகன் அராத்து

அமேசான் நாயகன் அராத்து
Updated on
1 min read

அமேசான் நடத்தும் ‘பென் டு பப்ளிஷ்’ போட்டியில் இந்த ஆண்டு அராத்துவின் ‘ஓப்பன் பண்ணா’ நாவல் முதலிடம் பெற்றிருக்கிறது. அருண் உலகநாதனின் ‘எவனோ ஒருவனது கதை’ இரண்டாம் இடத்தையும், கே.குணசீலனின் ‘கயல் வெளி’ மூன்றாம் இடத்தையும் பெற்றிருக்கின்றன. ஏற்கெனவே, ‘ஓப்பன் பண்ணா’ நாவல் வெளியீட்டு விழாவுக்காக கோவாவில் ரிஸார்ட் எடுத்து, 25 நண்பர்களோடு கொண்டாடினார் அராத்து. கிண்டில் மின்னூலுக்கு இப்படியொரு கொண்டாட்டம் யாரும் செய்திராதது. இப்போது நாவல் முதல் பரிசு வேறு வென்றிருப்பதால் அராத்துவின் நண்பர்கள் அடுத்த கொண்டாட்டத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்களாம்.

சொல்வனம் - 250!

தமிழில் அச்சு வடிவில் வரும் சிற்றிதழ்களைப் போலவே மின்னிதழ்கள் பலவும் சொற்ப காலமே நீடிப்பது துரதிர்ஷ்டவசமான நிலைமை. ஆனாலும், சில மின்னிதழ்கள் தொடர்ந்து செயல்பட்டுவருவது ஆரோக்கியமான விஷயம். அவற்றுள் ஒரு மின்னிதழான சொல்வனத்தின் 250-வது இதழ் (https://solvanam.com/) தற்போது வெளியாகியிருக்கிறது. பத்தாண்டுகளுக்கும் மேல் இப்படி மின்னிதழ் நடத்தியிருப்பது பெரும் சாதனை. கி.ராஜநாராயணன், அ.முத்துலிங்கம், ஜெயமோகன் தொடங்கி அ.வெண்ணிலா, போகன் சங்கர், ஆர்.அபிலாஷ் என்று பலரும் பங்களித்திருக்கிறார்கள். இலக்கியம் மட்டுமல்லாமல் இசை, தத்துவம் போன்றவற்றிலும் இந்த மின்னிதழ் கவனம் செலுத்திவருகிறது. இந்த மின்னிதழின் பங்களிப்புகளுள் மொழிபெயர்ப்பும் ஒன்று. ‘சொல்வனம்’ இதழுக்கும், அந்த இதழின் ஆசிரியர் மைத்ரேயனுக்கும் அவரது குழுவினருக்கும் வாழ்த்துகள்!

சென்னையில் புத்தகக்காட்சி

கே.கே.நகர் பேருந்துப் பணிமனை அருகிலுள்ள விஸ்வகர்மா மினி மஹாலில் ஆகஸ்ட் 8 வரை புத்தகக்காட்சி நடக்கிறது. 10% தள்ளுபடி உண்டு. தொடர்புக்கு: 98845 15879

நங்கநல்லூர் ரங்கா திரையரங்கம் அருகிலுள்ள ஜே.கே.மஹாலில் ஆகஸ்ட் 8 வரை புத்தகக்காட்சி நடக்கிறது. 10% தள்ளுபடி உண்டு. தொடர்புக்கு: 98843 55516

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in