Published : 17 Jul 2021 07:04 AM
Last Updated : 17 Jul 2021 07:04 AM

நூல்நோக்கு: சிறுதெய்வ உருவாக்கத்தின் பின்னணி

ஒவ்வொரு நாட்டார் தெய்வத்துக்கும் ஒரு வலிமையான உருவாக்கப் பின்னணி இருக்கிறது. கூற்று முறைகளில் சிறுசிறு வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால், தெய்வ உருவாக்கத்தின் மையக்கூறு ஒன்றாகவே இருக்கிறது. அய்யனார், கருப்பசாமி, மதுரைவீரன், சுடலைமாடன், முனீஸ்வரன் போன்ற ஆண் சிறுதெய்வங்களுக்கு இணையாக மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், பேச்சியம்மன் போன்ற பெண் சிறுதெய்வங்களும் பொதுமக்களால் கொண்டாடப்படுகின்றனர். ஓர் ஊரையோ இனத்தையோ காக்கும் போராட்டத்தில் வீரமரணம் எய்திய ஆண்கள், பின்னாளில் அப்பகுதியின் தெய்வமாக்கப்பட்டார்கள். பெண் சிறுதெய்வங்களின் வரலாறு இதற்கு நேரெதிரானது. பெரும்பாலான பெண் தெய்வங்கள், ஆதிக்கச் சாதியினரின் வன்முறைக்குப் பலியானவர்களாக இருக்கிறார்கள்.

ஆண்-பெண் தெய்வ உருவாக்கத்தின் பின்னுள்ள வரலாறும் ஆண்களுக்குச் சார்பானதாகவே இருக்கிறது. இந்தப் பின்னணியைக் களமாகக் கொண்டுதான் அபிமானியின் ‘தீர்ப்புகளின் காலம்’ நாவலை அணுகத் தோன்றுகிறது. தென்தமிழகத்தில்தான் சிறுதெய்வங்களின் எண்ணிக்கை அதிகம். இந்த நாவலும் தென்தமிழகத்தைக் களனாகக் கொண்டே எழுதப்பட்டிருக்கிறது. இந்நாவலில், ஆதிக்கச் சாதியினர் தெற்குத் தெருவிலும், ஒடுக்கப்பட்டவர்கள் வடக்குத் தெருவிலும் வசித்துவருகின்றனர். திருமணம் நடைபெறுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, ஆதிக்கச் சாதியைச் சார்ந்த மூன்று பேர் தெய்வானை என்ற ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்த பெண்ணைச் சீரழித்துக் கொன்றுவிடுகின்றனர். சந்திரமதியின் உடலில் தெய்வானை தெய்வமாக இறங்கி, அனைவரையும் பழிவாங்குகிறாள். தெய்வானையின் மூலமாக ஒடுக்கப்பட்டவர்கள் எழுச்சி பெறுகிறார்கள். இப்போது அவள் அந்த ஊருக்குத் தெய்வம். இதுதான் நாவலின் கதைச்சரடு.

சந்திரமதியின் காலில் விழுந்து வணங்குவதற்கு ஆதிக்கச் சாதியினர் தற்போது தயக்கம் காட்டுவதில்லை. ஏனெனில், சந்திரமதி என்கிற ஒடுக்கப்பட்ட பெண்ணுக்குள் இருப்பது தெய்வம். அந்தத் தெய்வத்தைத் தாங்கிக்கொண்டு நிற்கும் சந்திரமதியும் இப்போது தெய்வம். அடுத்து, ஆதிக்கச் சாதியினர் விற்கும் சாராயத்தைக் குடிப்பதற்கும், அவர்களின் நிலங்களில் உழைப்பதற்கும் சாதி குறுக்கே நிற்பதில்லை என்பதை நாவல் காத்திரமாகப் பேசுகிறது. ஒரு கோழியைப் போல ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்களைத் தூக்கிச்செல்வதில் சாதியோ தீட்டோ தடையாக இல்லை. அது ஒரு காலம். ஆனால், காலம் தற்போது மாறியுள்ளது. இது குற்றங்களுக்குரிய தண்டனைகளை வழங்கும் தீர்ப்புகளின் காலம்!

தீர்ப்புகளின் காலம்
அபிமானி
தடாகம் வெளியீடு
திருவான்மியூர்,
சென்னை – 41.
தொடர்புக்கு: 89399 67179
விலை: ரூ.150

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x