

மதுரையின் வரலாற்றை ஒரு கையடக்க நூலில் சொல்லிவிடுவது எளிதான காரியமல்ல. ஆனால், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் வெளியீடான ‘மாமதுரை’ நூல் மதுரையின் அரசியல் வரலாற்றை ஆழமாக ஆய்வுசெய்து பிட்டுப்பிட்டு வைத்திருக்கிறது. இந்த நூல் மதுரை நகரம் எப்படி உருவானது என்பது பற்றிய புவியியலையும் வரலாற்றையும் பின்னணியாகக் கொண்ட நூல் அல்ல.
மதுரையை ஆண்ட பல்வேறு அரசர்களின் ஆட்சியை அலசும் வரலாற்று நூல். சங்க கால அரசர்கள் தொடங்கி, சுல்தான்கள், விஜய நகர பேரரசின் கீழ் ஆட்சி செய்த நாயக்கர்கள் பற்றி நூலில் பல சுவையான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. மதுரையை ஆண்ட அரசர்கள் மட்டுமின்றி மதுரையை மையம் கொண்ட சைவம், வைணவம், சமணம், கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற சமயங்களின் வளர்ச்சியைப் பற்றியும் இந்த நூல் பேசியிருப்பது வாசிப்புக்கு சுவாரஸ்யம் அளிக்கிறது. மதுரையைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் இந்த நூல் ஒரு பொக்கிஷமாக இருக்கும்.
மாமதுரை
ஆசிரியர்கள்: பொ. இராசேந்திரன், சொ. சாந்தலிங்கம்
வெளியீடு: பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: ஷான்லாக்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
மதுரை-625 003.
தொடர்புக்கு: 96003 03383, 99422 66683