Published : 20 Feb 2021 01:20 PM
Last Updated : 20 Feb 2021 01:20 PM

360: கெ.பக்தவத்சலம் புகழேடு

கெ.பக்தவத்சலம் புகழேடு

ஒய்எம்சிஏவின் இலக்கிய அமைப்பாகச் செயல்படும் ஒய்எம்சிஏ பட்டிமன்றம், 1945-ல் ரா.பி.சேதுப்பிள்ளையால் தொடங்கப்பட்டது. அண்ணா தொடங்கி பல்துறைகள் சார்ந்த ஆளுமைகள் இங்கே சொற்பொழிவு ஆற்றியுள்ளனர். பாரம்பரியப் பெருமைமிக்க இந்த மன்றத்தின் செயலாளராக 1966 முதல் ஏறக்குறைய 54 ஆண்டுகளாகத் தொடர்ந்து இலக்கியப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட கெ.பக்தவத்சலம், கடந்த ஜூன் 30 அன்று மறைந்தார். ஒய்எம்சிஏ பட்டிமன்றத்தின் தலைவர் ஔவை நடராசன் தலைமையில் கெ.பக்தவத்சலத்துக்கான நினைவேந்தல் கூட்டம் ஒய்எம்சிஏ அரங்கில் கடந்த வாரம் நடந்தது. இலக்கிய இதழ்களில் ‘நித்திலக்கோ’ என்னும் புனைபெயரில் ஏராளமான கட்டுரைகளை எழுதியிருப்பவர் கெ.பக்தவத்சலம். பக்தவத்சலத்தின் மகனும் ஒய்எம்சிஏ பட்டிமன்றத்தின் தற்போதைய செயலாளருமான ப.தாமரைக்கண்ணன், தமிழ் ஆர்வலர்கள் பலரும் பக்தவத்சலம் குறித்து எழுதிய பதிவுகளைத் தொகுத்து ‘பண்பாளர் கெ.பக்தவத்சலம் புகழேடு’ என்னும் சிறிய நூலை நினைவேந்தல் நாளில் வெளியிட்டுள்ளனர்.

எழுச்சித் தமிழர் விருது - 2020

எழுச்சித் தமிழர் இலக்கிய விருதுகள் (2020) அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த கவிதைத் தொகுப்பாக கதிர்பாரதியின் ‘உயர்திணைப் பறவை’, சிறந்த சிறுகதைத் தொகுப்பாக அருண்.மோவின் ‘அநீதிக் கதைகள்’, சிறந்த நாவலாக சீனிவாசன் நடராஜனின் ‘தாளடி’ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த பெண்ணிய எழுத்துக்காக தேன்மொழி தாஸ், சிறந்த ஓவியத்திரட்சிக்காக அமுதன் பச்சைமுத்து, சிறந்த பௌத்தக் கருத்தியல் எழுத்துக்காக க.ஜெயபாலன் ஆகியோர் தேர்வாகியிருக்கின்றனர். கடந்த ஐந்தாண்டுகளில் வெளியான மிகச் சிறந்த அரசியல்-கருத்தியல் பனுவலாக தொல்.திருமாவளவனின் ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நூல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 21 அன்று மாலை வடபழனியிலுள்ள புரட்சியாளர் அம்பேத்கர் திடலில் விருது வழங்கும் விழா நடக்கிறது. விருதாளர்களுக்கு வாழ்த்துகள்!

ஒலிப் புத்தகமாகத் தமிழின் முதல் நாவல்

நவீனத் தமிழ் இலக்கியத்தின் முதல் நாவலாகக் கருதப்படும், மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ இப்போது ஒலிப் புத்தகமாக வந்திருக்கிறது. 1857-ல் வெளியான இந்நாவல், தமிழ் இலக்கியத்தின் ஒரு முக்கியமான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. பத்திரிகையாளரும் செய்தி வாசிப்பாளருமான எம்.அருணாச்சலம் இந்நாவலுக்கு ஒலி வடிவம் தந்திருக்கிறார். ஸ்டோரிடெல் (https://www.storytel.com/) இணையதளத்தில் கேட்கலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x