Published : 30 Jan 2021 07:17 AM
Last Updated : 30 Jan 2021 07:17 AM

பதிப்பாளர் நல வாரியத்தின்  கண்கள் திறக்குமா?

பதிப்பாளர் நல வாரியத்தின் கண்கள் திறக்குமா?

மெரினாவில் கண்ணகி சிலையிலிருந்து திருவல்லிக்கேணி நோக்கிச் செல்லும் சாலையில் இடதுபுறம் அமைந்துள்ள ‘திருவல்லிக்கேணி புக் ஹவுஸ்’ அப்பகுதியின் பிரபலமான புத்தக அடையாளம். சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தேவையான அனைத்து பாடநூல்களும் அங்கு கிடைக்கும். போட்டித் தேர்வுப் புத்தகங்கள் வாங்குவதற்காக சென்னை வரும் மாணவர்கள் தவறாமல் வந்துசெல்லும் கடைகளில் இதுவும் ஒன்று. விரைவில் இந்தப் புத்தகக் கடையை மூடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறார் இக்கடையின் உரிமையாளர் என்.ஆர்.மோகன். இருப்பில் இருக்கும் புத்தங்களைத் தள்ளுபடி விலையில் விற்பனைசெய்யவும் ஆரம்பித்திருக்கிறார். கரோனா ஊரடங்காலும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாததாலும் புத்தக விற்பனை குறைந்ததுதான் காரணமாம். திருவல்லிக்கேணியின் நவீன கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த ஒரு புத்தகக் கடையை மூட நேர்வது துயரமானது. புத்தகப் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர் நலவாரியம் தனது பொறுப்புகளை உணர்ந்து இனிமேலாவது இத்துறையைப் பாதுகாக்க முயற்சிகள் எடுக்குமா?

புத்தகக்காட்சிகள்

ராமநாதபுரம் புத்தகக்காட்சி: கலை இலக்கிய ஆர்வலர் சங்கம், பாரதி புத்தகாலயம், அருணா நோட் புக் ஸ்டோர் ஆகியவை சேர்ந்து நடத்தும் 4-வது புத்தகத் திருவிழா ராமநாதபுரத்தில் கடந்த 22-01-2021 அன்று தொடங்கி 04-02-2021 வரை நடக்கிறது. அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. இடம்: செய்யது அம்மாள் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம். நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை.

வேளச்சேரி புத்தகக்காட்சி: ‘ஆயிரம் தலைப்புகள், ஒரு லட்சம் புத்தகங்கள்’ என்ற கோஷத்துடன் வேளச்சேரியில் கடந்த 23-01-2021 அன்று தொடங்கி 14-02-2021 வரை புத்தகக்காட்சி நடக்கிறது. அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. இடம்: சங்கீதா ஹோட்டல் எதிரில். நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை. தொடர்புக்கு: 9884355516

தேனி புத்தகக்காட்சி: மதுரை மீனாட்சி புக் ஷாப் & தேனி மணிமேகலை டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகக் கண்காட்சி தேனியில் 28-01-2021 அன்று தொடங்கி 15-02-2021 வரை நடக்கிறது. அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. இடம் - 81, எடமால் தெரு. நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், தேனி. நேரம்: காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை. தொடர்புக்கு: 9443262763.

மேற்கண்ட மூன்று புத்தகக்காட்சிகளிலும் ‘இந்து தமிழ் திசை’யின் வெளியீடுகள் கிடைக்கும்.

ஆண்டு முழுவதும் இசை மேதையின் நினைவு

பெரும் புகழ்பெற்ற தவில் இசைக்கலைஞர் வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளையின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் நினைவில் கொள்ளும் வகையில் மேசை நாட்காட்டியொன்றை வெளியிட்டிருக்கிறது சென்னையைச் சேர்ந்த ‘பரிவாதினி’ அமைப்பு. பக்கத்துக்குப் பக்கம் சண்முகசுந்தரத்தின் அரிய புகைப்படங்களோடு அவரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களும் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளன. சண்முகசுந்தரம் மட்டுமின்றி அவரது இசை ஆசிரியர் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, நாச்சியார்கோவில் ராகவ பிள்ளை ஆகியோருக்கும் தனிப் பக்கங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. சண்முகசுந்தரத்தின் சமகால இசைக்கலைஞர்களின் நினைவலைகளும் பதிவாகியுள்ளன. நாகஸ்வர வித்வான் ஷேக் சின்ன மௌலானாவின் பெயரர் வித்வான் காஸிம் கூறிய ஒரு நினைவுப்பதிவே வலங்கைமான் சண்முகசுந்தரத்தின் திறமையைத் தெளிவாகச் சொல்லிவிடும்: ‘தாத்தாவும் அவரும் 37 ஆண்டுகள் சேர்ந்து கச்சேரி செய்திருக்கிறார்கள். எப்போதுமே அவர் தாத்தாவிடம் என்ன பாட்டு, என்ன தாளம் என்று கேட்டதே இல்லை. ஒருவருக்கொருவர் தங்கள் உடலசைவிலேயே அதைப் புரிந்துகொண்டுவிடுவார்கள்’. நாட்காட்டியின் விலை: ரூ.200, தொடர்புக்கு: 99809 92830

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x