Last Updated : 05 Dec, 2020 07:26 AM

 

Published : 05 Dec 2020 07:26 AM
Last Updated : 05 Dec 2020 07:26 AM

சிற்றிதழ் அறிமுகம்: தலித் வரலாறு பேச தனியாக ஓர் இதழ்

எழுத்தாளரும் விழுப்புரம் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் நடத்திவரும் ‘மணற்கேணி’ ஆய்விதழின் 50-வது இதழ் விரைவில் வெளியாகவிருக்கிறது. ஏற்கெனவே அவர் தொடங்கி பாதியில் நின்றுபோன ‘தலித்’ இலக்கிய இதழும் மீண்டும் வெளிவர ஆரம்பித்துள்ளது. மேலும், ‘போதி’ என்ற இருமாத இதழையும் அவர் நடத்திவருகிறார். இதுவரை ஆறு இதழ்கள் வெளிவந்துள்ளன. தலித் வரலாற்றையும் சாதி மறுப்பு வரலாற்றையும் பதிவுசெய்வதும் அதுசார்ந்த ஆய்வுக் கட்டுரைகள், நேர்காணல்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிடுவதும் ‘போதி’ இதழின் நோக்கம். அழகிய பெரியவன், ஜெ.பாலசுப்பிரமணியம், மலர்விழி.ஜெ, பால.சிவகடாட்சம், க.ஜெயதீஸ்வரன் ஆகியோரின் குறிப்பிடத்தக்கக் கட்டுரைகள் இதுவரை இவ்விதழில் வெளியாகியுள்ளன. அயோத்திதாசரின் மறைவுக்குப் பிறகு ‘தமிழன்’ இதழ், காலனியத்துக்கு முந்தைய காலகட்டங்களில் விளிம்பு நிலைமை ஆகிய தலைப்புகளில் ஞான.அலாய்சியஸ் எழுதிய கட்டுரைகள் சிங்கராயரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. இருநூறு பேர் ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினால் போதும், ‘போதி’யை மாத இதழாக மாற்றிவிடுவேன் என்று கூறும் ரவிக்குமாருக்கு இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர் போல பத்திரிகைக்காகத் தனி அச்சகம் தொடங்க வேண்டும் என்பது நீண்ட நாள் லட்சியம். விரைவில் நிறைவேறட்டும்!

போதி
ஆசிரியர்: ரவிக்குமார்
விழுப்புரம்- 605602
தனி இதழ் விலை: ரூ.30
தொடர்புக்கு: writerravikumar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x