Last Updated : 24 Oct, 2020 06:55 AM

 

Published : 24 Oct 2020 06:55 AM
Last Updated : 24 Oct 2020 06:55 AM

பிறமொழி நூலகம்: ஊற்றுக் கண்ணாய் வெறுப்பு

ப்ரிலியூட் டு எ ரியாட்
ஆனி ஜய்தி
அலெப் புக் கம்பெனி
புதுடெல்லி-110002.
விலை: ரூ.499

தென்னிந்தியாவின் ஆரவாரமற்றதொரு சிறு நகரம் எவ்வாறு படிப்படியாக வளர்ந்துவரும் வெறுப்பின் விளைவாக வன்முறைக் களமாக மாறுகிறது என்பதைக் காட்சிகளாக விவரிக்கும் நாவல் இது. இதை இருவேறு குடும்ப உறுப்பினர்களின் மூலம் மிக அழுத்தமாகச் சித்தரிக்கிறது. நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், திரைப்பட இயக்குநர், இலக்கிய விமர்சகர், கவிஞர் எனப் பல்வேறு தளங்களில் செயல்பட்டுவரும் ஆனி ஜய்தி, 2018-க்கான ‘தி இந்து நாடக ஆசிரியர் விரு’தைத் தனது ‘அன்டைட்டில்ட்-1’ நாடகத்துக்காக வென்றவர்.

தேயிலைத் தோட்டம் வைத்திருக்கும் ஒரு முஸ்லிம் குடும்பத்தின் 15 வயதுச் சிறுமி ஃபரீதா அவளது நெருங்கிய நண்பர்களின் கட்டாயத்தால் தன் விருப்பத்துக்கு விரோதமாகப் பன்றிக் கறியை உண்ண நேரிடுகிறது. அவளது அண்ணனோ அந்த நகரத்தில் எந்த நேரத்திலும் வகுப்புவாதக் கலவரம் நிகழக் கூடும் என்ற அச்சத்தில் கிடக்கிறான். இவர்களின் அன்புக்குரிய தாத்தாவோ தன்னைச் சுற்றி நிகழ்ந்துவரும் மாற்றங்களைப் பொருட்படுத்தாமல் செடிகளைப் பராமரிப்பதிலேயே கவனம் கொள்கிறார். திப்பு சுல்தானை வீழ்த்துவதில் பிரிட்டிஷாருக்கு உதவிய பரம்பரை என்று பெருமை பேசும் மற்றொரு குடும்பமோ ஊரில் வேலைக்காக வந்து குவியும் புலம்பெயர் தொழிலாளிகளின் உழைப்பைக் கடுமையாக உறிஞ்சிக்கொள்கிறது. காலம் காலமாக அருகில் வசித்துவரும் முஸ்லிம் குடும்பத்தின் மீதான அவநம்பிக்கையை மேலும் மேலும் வளர்த்துக்கொண்டே போகிறது. பெயரிடப்படாத, சுற்றுலாப் பயணிகள் வந்து குவியும் மலைப்பகுதி ஒன்றில் கதை நடைபெறுவதாக நாவல் சித்தரிக்கிறது. எனினும், நாட்டின் எந்தவொரு மூலையிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதற்கு வாய்ப்புண்டு என்பதை உணர்த்துவதாகவே நிகழ்ச்சிகள் படிப்படியாக உருப்பெறுகின்றன. ஒரு வகுப்புவாதக் கலவரத்தின் வேர்கள் எப்படி வேர்விடத் தொடங்குகின்றன என்பதை மிக ஆழமாக மனதில் பதிய வைப்பதில் இந்த நாவல் வெற்றிபெறுகிறது. மதம், சாதி, பாலின வேறுபாடு, வர்க்கம் ஆகியவற்றின் ஊடாக வெளிப்படும் வெறுப்பு எவ்வாறு சிக்கலானதொரு வடிவத்தை அடைகிறது என்பதை மிக நுணுக்கமாகச் சித்தரிக்கிறது.

வகுப்புவாத வன்முறையின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் வெறுப்புணர்வைத் தூண்டிவிடுவதற்கான வாய்ப்புகள் நம்மிடையே நிலவிவரும் இந்தத் தருணத்தில் இதுபோன்ற கூரிய நோக்கு மிக்க எழுத்துகள் நமக்கு மனத் தெளிவைத் தருவதாக அமைகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x