Published : 19 Sep 2020 08:43 AM
Last Updated : 19 Sep 2020 08:43 AM

கசப்புகளற்ற கதைகள்

நினைவுகள் நிறைந்த வெற்றிடம்
ஜி.மீனாட்சி
என்சிபிஹெச் வெளியீடு
அம்பத்தூர், சென்னை-98.
தொடர்புக்கு:
044 – 26251968
விலை: ரூ.100

ஜி.மீனாட்சி, பொள்ளாச்சியைச் சேர்ந்தவர். ஊடகத் துறையில் பணியாற்றுகிறார். லட்சுமி, சிவசங்கரி போன்றோரின் எழுத்துகளைப் படித்து வளர்ந்தவர். அதனால், வெகுஜன எழுத்தின் தாக்கம் இவரது கதைகளில் அதிகம். ‘கிராமத்து ராட்டினம்’, ‘பூ மலரும் காலம்’, ‘நினைவுகள் நிறைந்த வெற்றிடம்’ ஆகிய மூன்று சிறுகதைத் தொகுப்புகளும், ‘பேசும் ஓவியம்’, ‘பரிசலில் ஒரு பயணம்’ உள்ளிட்ட சிறுவர் கதைகள் அடங்கிய தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.

கசப்புகளை இவரது கதைகள் முதன்மைப்படுத்தவில்லை. மனதுக்கு நெகிழ்வை ஏற்படுத்தும் தருணங்களையே கதைகளாக்கி யிருக்கிறார். உதவாக்கரை, தண்டச்சோறு என்று சக உறவுகளால் இகழப்பட்ட சந்திரன், தன்னுடலைத் தானமாக வழங்கிவிட்டுப் போகிறான். அவனுக்கு இந்தச் சமூகத்தின் மீது விமர்சனம் இல்லை. குழந்தைப்பேறு வாய்க்காத வாத்தியார் தன்னுடைய மாணவர்களையெல்லாம் தனது குழந்தைகளாக வரித்துக்கொண்டு ஆறுதல் தருகிறார். கனமான கதையின் உள்ளடக்கத்தைக்கூட மிக எளிமையாகச் சொல்லிவிட்டுக் கடந்துவிடுகிறார். ‘நினைவுகள் நிறைந்த வெற்றிடம்’ அத்தகையதொரு கதைதான். காதலித்து மணந்தவள் நண்பனுடன் சென்றுவிடுகிறாள். அதை அவன் மிக எளிதாக எடுத்துக்கொள்கிறான். அவளின் தேவையை நான் புரிந்துகொள்ளவில்லை; அவளுக்கு என்ன வேண்டும் என்று நானும் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும். அதனால், அவள்மீது மட்டுமே குறை சொல்வதற்கில்லை என்று பேசுகிறான்.

‘புதிய பாடம்’ மிக முக்கியமான கதை. கிராமத்திலிருந்து மகனுடன் நகரத்துக்கு வந்து தங்கும் அம்மாவைப் பற்றியது. இப்படியான கதைக்கருவை எடுத்துக்கொள்ளும்போது வழக்கமாக, கிராமத்தின் மேன்மைகளை நகரத்தின் இழிமைகளுடன் ஒப்பிட்டுக் காட்டுவதாக கதை அமையும். கிராமத்தை விட்டு வெளியேறியவர்கள், நகரத்தில் இருந்துகொண்டு கிராமத்தின் சிறப்புகளைக் கடைசி வரை சொல்லிக்கொண்டிருப்பார்கள். இந்தக் கதை முற்றிலும் வேறானது. நகரத்துடன் அந்தத் தாய் தன்னைப் பொருத்திக்கொள்கிறாள். நகரத்தின் முகத்தைப் புரிந்துகொள்கிறாள். நகரத்துக்கு இருக்கும் சிறப்புகளையும் நினைத்துப் பார்க்கிறாள். இது அவளுக்கு நவீன வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

ஜி.மீனாட்சியின் கதைகள் நுண்ணுணர்வுகளின் சித்தரிப்புகளாக உள்ளன. கதையின் ஒரு பகுதியை மட்டுமே வெளிச்சமிட்டுக் காட்டுவதுதான் இவரது பாணி. இவர் வெகுஜன மொழியில் நம்பிக்கைக்குரிய கதைகளை எழுதியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x